143
நான்காம் நிகழ்ச்சி: ஏழாங்காட்சி
களம் : அமராவதியின் கன்னி மாடம்
காலம் : முற்பகல்
அமராவதி : (குளிர் கொண்டு வருந்தத் தோழியர் போர்வை கொண்டு மூடித் தாங்குகின்றனர்) இந்தக் குளிர்காய்ச்சல் என்னால் தாங்கமுடியவில்லை. ஐயோ! தோழிகாள்.யான் எங்ஙனம் பிழைப்பேன்! இத்தனை பேர் என் மருங்கிருந்து பணி செய்வதே எனக்குத் துன்பமாயிருக்கின்றது! ஏடி நீலம்! இவர்களெல்லாரையும் போக விட்டு நீ மட்டும் எனக்கருகேயிரு.
(மற்றைத் தோழிகளெல்லாரும் போய்விடுகின்றனர்)
நீலம் : அம்மா அமராவதி, நீ இப்படி வருந்துவதை அறிந்தால், நின் பெற்றோர்கள் இதன் மூலத்தை ஆராயத் தொடங்குவர்.
அமராவதி : யான் என்னடி செய்வேன்! அவரைக் காணாமல் என்னுயிர் தத்தளிக்கின்றதடி! என் தந்தையார் திடீரென்று நேற்று மாலை முதல் எனக்குப் பாடஞ் சொல்ல அவரை வர வேண்டாமென்று தடுத்துவிட்டதை நினைக்க நினைக்க என் நெஞ்சம் ஆறாத்துயரத்தில் ஆழ்கின்றதடி! இவ்வளவு துன்பமும் அவர் இரவிற் கொணர்ந்த பூவாலன்றோ விளைந்தது! சென்ற ஒரு கிழமையாக இரவிலும் அவர் என்பால் வரமுடியாமற் போயிற்றே!
நீலம் : என்னம்மா செய்யலாம்! நாம் நெருப்புக் கோட்டைக்கு நடுவிலன்றோ இருக்கின்றோம்! நின் காதலரோ நின்மேற் கொண்ட அளவுக்கு மிஞ்சிய காதலால்