32
―
மறைமலையம் 13
வலியரான ஆறுகள்வர் முறியடிக்கப் பட்டதனைப்பற்றி அவன் பின்னும் மிகுந்த வியப்படைந்து அவர்கள் சொற்களில் அவநம்பிக்கைப்படவே, அவர்கள், “கொல்லப்பட்ட அக் கொடிய கள்வர் மூவர் உடம்பும் பிணமாய்ப் பாதையிற் கிடத்தல் காணலாம்” என்று உறுதியுரைத்தனர்.
இங்ஙனம் மலைநாட்டுக் காவலதிகாரிகளுக்குத் தாஞ் சொல்ல வேண்டிய கடமையைச் செய்து விட்டுச், சிலநேரம் அக் குடிசையில் விடுதிகொண்ட பின் நீலலோசனன் தன் காவலாளர் இருவருடன் பயணம் பண்ணப் புகுந்தனன். இக் காவலாளர் இருவரும் வெறும் ஊழியக்காரர் அல்லர். நீலலோசனன் சிறந்த மன்னன் ஆகையால், அவனுடன் வந்த இவர்கள் பிரபுக்கள் என்று அறிய வேண்டும்.
இங்கு இவ்வரசிளைஞன், சேகரி வீரன், வியாக்கிர வீரன் என்னும் இருவருடனும் போய்க் கொண்டிருக்கும் போது, நமக்குநல்ல சமயம் வாய்த்தமையால் அவன் உடம்பின் அழகிய தோற்றத்தைப் பற்றி வருணித்துச் சொல்ல விரும்புகின்றோம். இவன் மிகவும் அழகாயிருந்தான் என்று முன்னமே பொதுவாகச் சொன்னோம், இவனுக்குக் கரிய அளகமுங் கரிய பெரிய விழிகளும் இருந்தன; இவன் மீசையானது கைவல் ஓவியன் துகிலிகையால் வனைந்தவாறு போலப் பளபளவென்று மேலுதட்டின் மேற் சுருண்டிருந்தது. இவன் மூக்குக் கழுகு போற் சிறிதே நுனியில் வளைந்திருந்தது, இதுவும் முகத்தில் உள்ள மற்றை உறுப்புகளும் மிக மெல்லியதன்மை யுடையவாயிருந்தன. இவன் உடம்பின் நிறம் பெரும்பாலார்க்கு உள்ளது போலக் கரியதாயில்லை ஆயினும் ஞாயிற்றின் வெப்பத்தாற் சிறிது பழுப்பு வண்ணமாய்த் தோன்றுதலின் நிறம் இளமையுருவிற் சிறிதுபருவமுதிர்ச்சிக் காட்டிற்று. இல்லா விட்டால், இவன் நிறம் இன்னுந் தெளிவாய் இளமைப் பருவத்திற்கு இசைந்ததாய் விளங்கும். இவ்வாறு உடம்பின் நிறம் பழுப்பாய்த் தோன்றுதற்குக் காரணம் ஆண்பாலர்க்குரிய வேட்டையாடுதலில் இவன் மிகுந்த விருப்பமுடையோனாய்ப் பகற்காலங்களில் திரிவதொன்றே என்று தோன்றுகின்றது. வேட்டையாடுவதிலுங் குதிரையேற்றத்திலும் இவன் நிரம்பிய திறமை வாய்ந்திருந்தனன். சிறிது நேரத்திற்கு முன்னே வந்து வழிமறித்த கள்வர்களை அஞ்சாது இவன் புறங்கண்டு வெற்றி
6
வனுடை ய