இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
120
மறைமலையம் -14
இவைகளெல்லாம் இவர்கள் தாமாகவே செய்த புதுவினையால் வந்தனவேயல்லாமல், பழவினைப்பயன் என்று சொல்வதற்கு இடமில்லையே! என் மனத்திலுள்ளவருத்தத்தால் இவைகளை யெல்லாந் தங்கட்கு வீணே விரித்தெழுதலானேன். என் ஆரூயிர்ப் பெருமானே, மூடிவேகும் ஒருகலத்தில் அதன் மூடியைத் திறந்த அளவானே அதன் உள்ளிருந்த வெப்பம் ஆறுவதுபோல, என் அகத்தேயுள்ள புழுக்கத்தைத் தங்களிடந் தெரிவித்துக் கொண்டால் எனக்கு ஆறுதல் உண்டாகின்றது. ஆதலால், எளியேனைத் தாங்கள் மன்னித்தல் வேண்டும். ஆ! இப்போது இவ்வீட்டு வாயிலில் ஏதோ ஒரு வண்டி வந்து நிற்கும் ஓசை கேட்கின்றது. ஓ! யாரோ யானிருக்கும் மேன்மெத்தைமேல் மெல்ல நடந்து வருவது போற் கேட்கின்றது! மிச்சமும் பின்னர் எழுதுகின்றேன். என் அன்பார்ந்த முத்தம்.