57
8. கல்வியுங் கைத்தொழிலும்
இவ்வுலகத்திலுள்ள எல்லா மக்களுந், தம்முயிரையும் உடம்பையும் பாதுகாத்து இனிது வாழ்வதற்கு இன்றியமையாத கருவிகள் இரண்டு. அவை, கல்வியுங் கைத்தொழிலுமாகும்.
பெரும்பாலும்
உலகத்தின்கண்
நடக்கும் எல்லா முயற்சிகட்குங், கல்வியானது முதன்மையாக வேண்டப்பட்டு உடம்பைப் பாதுகாப்பதேயாயினுஞ், சிறப்பாக நோக்குங்கால் கல்வி உயிரைப் பாதுகாத்து வளர்ப்பதற்கே கருவியா யிருக்கின்றது. கைத்தொழிலோ எவ்வளவு நுட்பமாகச் செய்யப்படினும் அஃது உடம்பைப் பாதுகாக்கு முகத்தால், உயிருக்குஞ் சிறிது பயன் படுமேயல்லது, அது கல்விபோல் உயிருக்கு நேரே பயன்படுவதன்றாம்.
6
ஆகவே, கல்வி ஒன்றுமே உயிர்க்கு நேரே பயன்படுவதா மென்பதுங், கைத்தொழிலோ உடம்பிற்கு மட்டும் நேரே பயன் படுவதாமென்பதும் அறிதல் வேண்டும். எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அதற்கு அறிவு வேண்டியிருக்கிறது. அறிவில்லாமல் எவரும் எதனையுஞ் செய்தலியலாது. அறிவுடையவன் தானெடுத்த ஒரு தொழிலைச் செவ்வையாக செய்து முடித்தலும், அறிவில்லாதவன் தான் துவங்கிய தொன்றை ஒழுங்காகச் செய்யமாட்டாமற் பிழைபட்டு வருந்துதலும் நாம் நாடோறுங் காண்கின்றோமல்லவா? அறிவில்லான் பிழைபட்டுச் செய்யமாட்டாத ஒரு தொழிலை அறிவுடையான் திருத்தமாக்கி விரைவிற் செய்து முடிப்பதனைக் கண்டு நாம் எவ்வளவு மகிழ்கின்றோம்! அப்போதவன் அறிவின்றிறத்தைக் கண்டு எவ்வளவு வியப்படைகின்றோம்! அறிவின் இன்றியமையாமையை எவ்வளவு மிகுதியாய் உணர்கின்றோம்!