158
மறைமலையம் -18
களையுமேயன்றி வேறெதனையும் பேசாராயினார். இதனால், இந்நங்கையை மணம் புரிதற்குமுன் அம்மன்னன் மேற் கொண்டிருந்த பொருந்தா நடைகளைப்பற்றிய பேச்சும் மறைந்துபோயது.
இங்ஙனம் மணவாழ்க்கையிற்புகுந்த அவ்வரசிக்கும் அரசற்கும் முதலில் ஒரு பெண்மகவு பிறந்தது. அதன்பின் நாலைந்து ஆண்டுகள் கழித்து அவ்வரசி கருக்கொண்டு தன்கொழுநன் பெரிது உவக்கும்படி ஓர் ஆண்மகவினையும் ஈன்றனள். அந்நிகழ்ச்சிக்குப்பின் அவ்வரசனுள்ளத்திற் புதுமை யான ஓரெண்ணந் தோன்றலாயிற்று. அதாவது: தன்னழகிய மனையாளின் மனப்பொறுமையினை, ஒரு நீண்டகாலப் பயிற்சியினாலுந் தாங்கமுடியாச் சில நடைகளாலும் ஆராய்ந்து கண்டறியவேண்டுமென்பதேயாம். முதன்முதற், கொடுஞ் சொற்களால் அவட்கு வருத்தத்தை விளைவிக்க முயன்றும், அதன்பின் கடும்பார்வையாலுஞ் சுளித்த முகத்தாலும் அதனை மிகுதிப்படுத்தியும் அவ்வளவில் அமைதிபெறாமல், தான் இழிபிறப்பும் இழிந்த பழக்கமும் உடைய ஒருத்தியை மணந்துகொண்டு அவளால் இரவலரையொத்த மக்களைப் பெறப்போவது பற்றியும் முன்னமே பிறந்துள்ள மகளைப்பற்றியும் தன் குடிமக்கள் முறுமுறுத்துத் தன்மேல் அருவருப்புறுகின்றார்களெனவுங் கூறினான். அச்சொற்கேட் கிரிசெலாள், சிறிதுந் தன்முகம் வேறுபடாமலுந் தன் தோற்றத்தில் ஏதுங் குணமாற்றங் காணப்படாமலுந் தன் தலைவனை நோக்கி,
L
தன்
"மாட்சிமை தங்கிய என் அருட்பெருமானே, தங்க ளுடைய மேன்மைக்கும் மனநலத்திற்குந்தகத், தாங்கள் என்னை எவ்வாறு செய்யவேண்டினாலும் அவ்வாறு செய்யலாம்; ஏனென்றால், யான் தங்கள் குடிமகளிற் கடைப்பட்டாரினுங் கடைப்பட்டவள் ஆவேன் என்பதுந், தாங்கள் என்னை உயர்த்த விரும்பிய உயர்நிலைக்கு யான் தகுதியில்லாதவள் என்பதும் யான் நன்கறிவேன்" என மொழிந்தனள்.
இவ்விடைமொழியானது அம்மன்னன் கொண்ட நோக்கத்திற்கு ஏற்றதாயிருந்தது. ஏனென்றால், அவன் தான் அவளை உயர்த்திவைத்த உயர்நிலையானது, இறுமாப்பினை