5
1. அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும்*
“எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயலுண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் இப்பொருள்அப் பொருளென்றே இசைப்ப தென்னே பொதுவில் இறைவர்செயும் நிரதிசய இன்பநடந்தனைநீ கைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே
-இராமலிங்க அடிகள்
ராமலிங்க அடிகளார் அருளிச் செய்த மேலைத் திருப்பாட்டினை மேற்கோளாக எடுத்துக்கொண்டு “அம்பலவாணர் திருக்கூத்தினுண்மையும் ஞானயோகமும்" என்னும் எமது விரிவுரையினை நிகழ்த்துவான் புகுகின்றோம் அறிவில்லா எவ்வகைப்பட்ட பொருள்களினகத்துப் புறத்தும், அறிவுடை எவ்வகை யுயிர்களின் அகத்தும் புறத்தும், நிறைந்திருப்பதும் இயற்கையுண்மையும் இயற்கையறிவும் இயற்கையின்பமும் உடை யதாகி ஓவாது இ இயங்குந் திருக்கூத்தை இயற்றுவதும் ஆன உண்மைப்பொருளாஞ் சிவம் ஒன்றே முழுமுதற் கடவுளாகும் என்பதூஉம், இதனுண்மையை யுணர்ந்து அவ்வாற்றாற் சிவவயமாய் நின்றவர்க்குத் தாம் பேரின்பத்தை யடைந்த அவ்வளவில் மனவமைதி பெறாது தாம் பெற்ற பெறலரும் பேற்றை அது பெறாத ஏனை மக்களும் பெறும்படி அவர்க்கு அதனை யெடுத்துக்கூறும் அருளிரக்க முண்டாமென்பதூஉம், அங்ஙனஞ் சிவஞானிகளாயினார் கூறும் மெய்யுரையினை