194
❖ மறைமலையம் - 20
அதன்பின், வளிநிலையாகிய 'பிராணாயாமம்' புகன்றார். உடம்பின் உள்நின்ற காற்றைக் கழித்தல் 'இரேசகம்’ என்றும், அங்ஙனங் கழித்தபின் வெளிநின்ற காற்றை உள்ளிழுத்தல் ‘பூரகம்’என்றும், உள்நிறைந்த காற்றைக் கொப்பூழின் கீழுறுப்பில் நிறுத்தல் ‘கும்பகம்' என்றும் யோகநூலார் கூறுவர். அஃது ஆசிரியர் திருமூலர்,
“வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே
(திருமந்திரம், 573)
என அருளிச் செய்திருக்குமாற்றால் அறியப்படும். இதனை நச்சினார்க்கினியர்,
“உந்தியொடு புணர்ந்த இருவகைவளியுந்
தந்தம் இயக்கந் தடுப்பது வளிநிலை”
என்னுந் தமது உரைச் சூத்திரத்தால் விளக்குவர்.
அதன்பின், தொகைநிலையாகிய, 'பிரத்தியாகாரங்' கூறினார். இதனியல்பு,
“ஒருக்கால் உபாதியை யொண்சோதிதன்னைப்
பிரித்துணர்வந்த உபாதிப்பிரிவைக்
கரைத்துணர் வுண்ணல் கரைத்தல் உண்ணோக்கல்
பிரத்தியாகாரப் பெருமையதாமே’
என்னுந் திருமந்திரத்தானும் (585),
“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமல் ஒருவழிப்படுப்பது தொகைநிலைப்புறனே'
என்னும் நச்சினார்க்கினிய ருரைச்சூத்திரத்தானும் விளங்கா நிற்கும்.
அதன்பிற், பொறைநிலை என்னுந் ‘தாரணை’ கூறினார். ஐம்பூதங் களால் ஆக்கப்பட்ட இவ்வுடம்பில் அடிமுதல் முழங்கால்வரையிலுள்ள பகுதி நிலப்பகுதியின்பாற் படும்;