மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2
159
அதனைத் தமது கோட்பாட்டிற்குப் பொருந்திய பெயராய்த் தாமும் வழங்கலாயினர். பண்டைத் தமிழ் மக்களால் ஒரே தெய்வமாக வைத்து வணங்கப்பட்டு வந்த ‘அம்மையப்பரே' பின்னர் இருவேறு தெய்வங்களாகப் பிரிந்ததும், அவ்விரண்டுள் ‘திருமால்’ தமது பண்டை முழுமுதற்றன்மை யிழந்து கண்ணன் இராமன் என்பாரினுந் தாழ்ந்த நிலைமையை யடைந்ததும், அதனால் முன்னர் ஓர் இனத்தினராயிருந்த தமிழ்நன்மக்கள் பின்னர்ச் ‘சைவர்’ ‘வைணவர்' என இருவேறு பகுப்பினராய்ப் பிரிந்து வேறுபட்டதும் ஆகிய இவையெல்லாம், ஆரியப் பார்ப்பனரில் ஒரு கூட்டத்தார் கி.பி.முதல் நூற்றாண்டில் ‘மாபாரதக் கதை’யினையும், மற்றொரு கூட்டத்தார் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ‘இராமாயணக் கதை’யினையும் இத் தென்றமிழ் நாட்டிற்கொணர்ந்து அவை தம்மை மிகப் பரப்பிய காலம் முதல்முறையே நிகழ்ந்து வளர்ந்தனவாகும். கண்ணனிலுந் திருமால் இழிந்தோராகத் தாழ்ந்தப்பட்டமைக்கு நம்மாழ்வார்,
L
"திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள்எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்.6'
என்று கூறுதலே சான்றாம். வடக்கிருந்து வந்த ஆரியப் பார்ப்பனர் இந்திரன், வருணன், மித்திரன் முதலான சிறுதெய்வங்களுக்கு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டு அவரை வணங்கும் நீரரேயல்லாமல், முழுமுதற் கடவுளையும் அதனை வழிபடும் அன்பின் முறைகளையும் ஒரு தினையுளவுதானும் அறிந்தவர் அல்லர். மக்களைத் தெய்வங்களாக வணங்குதலே அவ்வாரியர்க்கு மிக்க விருப்பத்தினையும் மகிழ்ச்சியினையுந் தருவதல்லது. முழுமுதற் கடவுள் வணக்கம் அவர்க்குச் சிறிதும் உவப்பினைத் தருவதன்று; அதனால் அவர் அதனை எட்டிக்காயினுங் கைப்பதாக நினைந்து இகழாநிற்பர். இப் பெற்றியினராகிய அவ்வாரியர் இத்தென் தமிழ்நாடு புகுந்ததும் தமிழ்ச் சான்றோர் அறிவானும் நாகரிகத்தானும் தம்மினும் மிகச் சிறந்தோராய் விளங்கி முழுமுதற்கடவுளை அம்மையப்பராக வைத்து வணங்கும் விழுமிய முறையினைக் காண்டலும், பல சிறுதெய்வ வணக்கத்திலும் வெறியாட்டு வேள்வியிலும் பழகிய தமதறிவுக்கு அஃது எட்டாமையால், தாம் புனைந்து கட்டிக் காணர்ந்த மாபாரத இராமாயணக் கதைகளின் உதவிகொண்டு