பக்கம்:மறைமலையம் 3.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
129

பெறுதல் ஓர்ந்தேன்; அதனால் என் உருவமும் வலிவடைந்தது. யான் இவர்களுக்கு உதவி செய்ததைப் பற்றிக் களிகூர்ந்தேன். அவர் தமது அன்பினாற் செலுத்திய காணிக்கைகளினால் யான் சூழப்பெற்றிருக்கக் கண்டேன். ‘தாங்கள் இதனை எமக்குச் செய்தீர்கள்! யாங்கள் நிலவுலகத்தை விட்டு வருதற்கு முன்பே எமக்கு மறுமையைப்பற்றித் தெரிவித்தீர்கள்; ஆகவே இப்போது எமது காணிக்கையைத் தங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றோம்’ என்று அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு யான் ஒளி மிகப்பெற்றேன் போல் தோன்றியது; யான் முன்னே நோக்கிக்கொண்டிருந்த ஆன்றோர் அணிந்திருந்த உடைபோல எனது உடையும் காணப்பட்டது; புதிது புதிதாக வருங் காணிக்கையினால் நன்றியறிதலைப்பற்றி என் உள்ளம் நினைவு மிகுந்து வலிவடைந்தது; கடைசியாக யான் ஆகாயத்திற் பறந்து சென்று, எனக்கு அறிமுகம் உள்ளவர்கள் நடுவிற்போய் அமர்ந்தேன். ‘இப்போது நீர் எங்களில் ஒருவராயினீர்,’ என்று அவர்கள் என்னை நோக்கிக் கூறினார்கள்.

பழக்கப்பட்ட நினைவுகளும் அசட்டையாற் புகுந்த எண்ணங்களும் ஏறி உயிரில் உண்டான கறைகளினின்றும் விடுபட்டு யான் தனியே யிருக்கின்றேன். என்றாலும், யான் காண்கின்ற ஆன்றோர் பலர் அடைந்திருக்கும் உயர்ந்த நிலையை யான் அடைதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் கழிய வேண்டு மென உணரப் பெற்றேன். காண்டற்கும் ஏலாத அத்தனை பள பளப்புள்ள ஆன்மாக்கள் சில இருக்கும் ஒளியுலக வாழ்வின் உரிமையை நான் பெறுதற்கு முன் யான் என்னை வயப்படுத்து தற்கு நெடுங்காலம் உழைப்பெடுக்க வேண்டும். சில வேளைகளில் என் அன்புள்ள தோழர் என் பக்கத்திருக்க நாங்கள் இருவேமும் அரவமின்றித் தனித்திருக்கும் எங்கள் சூக்கும இருப்பிடத்தின் கண்ணே அமர்ந்திருந்து. மேனிலை யிலுள்ள சான்றாரோடு கலந்து பேசுகின்றோம்; அவர்களில் ஒருவரின் உண்மையைப் பற்றியும் நிறைந்த அன்பைப்பற்றியும் மாந்தர் நன்குணர்ந் திருக்கின்றனர். ஆயினும், அம் மாந்தர் அவர் சென்ற வழியே சிறிதும் செல்கின்றார்களில்லை; அவருதவியைப் பெற்று அவர்கள்மேல் உயர்வதுமில்லை. இங்ஙனம் கூடியிருக்கும் ஆவேசக் கூட்டங்களுக்கு நிரம்பவும் மேலே, உயர்வும் அறிவும் நன்மையும் மிக்க ஆன்றோர் குழாத்திற்கு மிகவும் மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/162&oldid=1624471" இலிருந்து மீள்விக்கப்பட்டது