பக்கம்:மறைமலையம் 3.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
160

❖ மறைமலையம் - 3 ❖

ஒரு பெரிய மிருகத்தின் கால்களினிடையே குடைந்து செய்யப்பட்ட ஒரு கோயிலையும், அக்கோயிலில் நடைபெறும் கிரியைகளையும், அதனைச் சூழ்ந்த நிலத்தோற்றத்தையும், அங்கு மேற்கவிந்துள்ள வானின் நீல நிறத்தையும் ஒருவர் தெளிவாய் நினைவுகூர்ந்தனர்; இவர் இப்பிறவியில் அத்தகைய கோயிலையும் அதனோடு சேர்ந்த பிறவற்றையும் எங்குங் கண்டவர் அல்லர், நூல்களிற் படித்தாயினும் பிறர்வாய்க் கேட்டாயினும் உணர்ந்தவருமல்லர். கனவினும் நனவினும் இவர் அடிக்கடி நினைவுகூர்ந்துவந்த அவ்வமைவுகள் எங்குள்ளன என்று ஆராயப்புகுந்த துரைமகன் ஒருவர் அவற்றைப் பழைய எகுபதி* (Ancient Egypt) நாட்டின்கண் இருப்பனவாக அறிந்து பெரிதும் வியப்புற்றார். முன்னொரு பிறவியிற் பழைய அவ்வெகுபதி நாட்டிற் பிறந்திருந் தமையால் இவர் தாம் அப்போது அங்கு கண்ட அமைவுகளை இப் பிறவியில் தெளிவாக நினைவுகூர்ந்து வந்தார். இவர் இங்ஙனம் நினைவுகூர்ந்துவந்த அவ்வமைவுகளை இப்போதும் அப் பழைய எகுபதி நாட்டிற்குச் செல்பவர் நன்கு கண்டுண ரலாம். அங்கே பெரியதொரு காட்டுவிலங்கின்* (Egyp- tian sphinx) உருவம் அமைக்கப்பட்டிருத்தலும் அவ்விலங்கின் முன்னங் கால்களின் நடுவே ஒருகோயில் குடைந்து செய்யப் பட்டிருத்தலும், பிறவும் எவருஞ் சென்று காணலாம். இவர் வேறொரு பிறவியில் நம் இந்திய நாட்டின் ஒரு மலைப்பக்கத்தே பிறந்திருந்தமையால் அந் நினைவையும் இந்நினைவோடுகூட அடிக்கடி நினைத்து வந்தார்.

இன்னும் ஒருவர் தாம் பல பிறவிகளிற் கண்ட அனுபவங்களை யெல்லாம் நினைத்து வந்தனர். முன்னொரு பிறவியில் தாம் சீனதேசத்தின் உள்நாடொன்றிலுள்ள ஓர் ஆலயத்தில் கண்ட காட்சிகளையும், அங்கு நடந்த மறைவான சடங்குகளையும், தாம் அவ் வாலயத்திற் செய்த ஊழியத்தையும், பேசிய சொற்களையும், நடைபெறுவித்த கிரியைகளையும் தெளிவாக நினைவுகூர்ந்து வந்தார். இவர் நினைந்தவை அத்தனையும் உண்மை யனுபவங்கள் என்று அவற்றை ஆராய்ந்தவர் மெய்ப்படுத்தி யிருக்கின்றார்.

மற்றும் ஒருவர் தாம் தொடர்பாக ஏழு பிறவிகளில் அனுபவித்த அனுபவங்களையும், அவ்வப் பிறவிகளில் தாம் இருந்த இடங்களையும், அங்கே தாம் பூண்டிருந்த பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/193&oldid=1625168" இலிருந்து மீள்விக்கப்பட்டது