பக்கம்:மறைமலையம் 3.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
161

களையும், இன்னும் பல வரலாறுகளையும் மிகவும் நுணுக்கமாக நினைவு கூர்ந்து வந்தனர். இவரது நினைவின் ஆற்றல் நிரம்பவும் புதுமையாயும் வியப்பைத் தருவதாயும் இருந்தது. இவர் இப்போதுள்ள நாட்டுக்கு மிகவுந் தொலைவிலுள்ள ஓர் அயல்நாட்டிலே முற்பிறவியிற் பிறந்திருந்தனர். ஒரு பிறவியில் தாமிருந்த இடத்தையும் அதனைச் சூழ்ந்துள்ள பொருள்களையும் பெரிதும் நினைவு கூர்ந்தமையால் அவற்றை இவர் இப் பிறவியில் தாமே நேரிற் சென்று கண்டு தமதனுபவம் உண்மையெனத் தெளிந்து கொண்டார். இவரது மற்றொரு பிறவியின் அனுபவம் இவர் சென்றறியாத பிறிதோர் அயல் நாட்டின்கண் உள்ளதென்று அதனை ஆராய்ந்தோர் நிறுவிக் காட்டியிருக்கின்றனர்.

இவ்வாறு உயர்ந்த அறிவினரான ஒரு சிலர்க்குத் தோன்றும் நினைவுகளை ஆராய்ந்து பார்க்க, அவை மேற்சென்ற பிறவிகளில் அவர்க்கு நிகழ்ந்த அனுபவங்களின் பயனாய் அவர்தம் உள்ளத்திற் பதிந்துகிடந்து, இப் பிறவியிலே அவர்தம் தூய அறிவின்கண் விளங்கித் தோன்றலாயின என்னும் உண்மை அறியப்படுகின்றது. ஆகவே, கனவிற் காணப்படுங் காட்சிகளிற் பெரும்பாலன மேற் கழிந்துபோன பிறவிகளின் மெய்யனு பவங்களே யல்லது, அறியார் சிலர் கூறுமாறு வெறும் பொய்த்தோற்றங்கள் அல்லவென்பது நன்கு பெறப்படும். நம்மனோருட் சிலர் பலர்க்கு இத்தகைய மேற்பிறவி யனுபவங்கள் கனவினும் நனவினும் மேற்கிளர்ந்து தோன்று தலைத் தாமாகவே யறிந்து வியப்படைந்து வருதலையுங் கண்டிருக்கின்றோம். இப் பிறவியில் இதற்குமுற் கண்டறியாத சிலரை ஒரோவொருகாற் கண்டு “இவரை எங்கேயோ பார்த்தாற்போலிருக்கின்றதே!” என்று பற்பலகால் நாம் வியப்படைந்திருக்கின்றனம் அல்லமோ? மற்றுஞ் சில புதிய இடங்களுக்குச் செல்ல நேரிட்டபோது அவற்றைப் பார்த்து, “இவ்விடத்தினை நாம் முன்னே கண்டாற்போலிருக் கின்றதே!” என்று இறும்பூதுகொள்ளப் பெறுகின்றனம் அல்லமோ? ஆன்றோர் சிலர் நூல்களைப் பயின்றறியுங் காலத்து அதில் கூறப்பட்டவை சில பல நமக்குத் தெரிந்தனவாயிருத்த லுணர்ந்து அகம் மகிழ்ந்து வியக்கின்றனம் அல்லமோ? இங்ஙனமே இன்னும் இப்பிறவியிற்றோன்றும் அனுபவங்களிற் சில பல யாம் இப் பிறவியில் முன்னறியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/194&oldid=1625171" இலிருந்து மீள்விக்கப்பட்டது