இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மறைமலையம் - 3 ❖ |
தனவாயிருந்தும், அறியப்பட்டன போற் காணப்படுதலுணர்ந்து, அவற்றின் உண்மை இனைத்தென்று அறியாமல் மயங்குதலும் உண்டு. ஆயினும், இன்னோரன்னவை யெல்லாம் மேற்கழிந்து போன எண்ணிறந்த பிறவிகளிற்றொகுத்த மெய்யனுபவங்களின் தோற்றங்களே யென்று பிறவிகளின் தொடர்பறிந்தோர் ஐயமறத் தெளிந்து கொள்வர்.
இனி நமது கனவுநிலையில் மேற்பிறவியின் அனுபவங்கள் மாத்திரமே யன்றி இப் பிறவியின் அனுபவங்களும் இப் பிறவியினும் வரும் பிறவியினும் இனி வரற்பாலனவாகிய இனி அனுபவங்களும் முற்றோன்றுதல் உண்டு. இப் பிறவியில் இப்போது நிகழும் அனுபவங்களின் தோற்றத்தை எவரும் உணர்ந்திருத்தலால், இனி வரற்பாலனவாகிய அனுபவங்களின் முற்றோற்றத்தை மாத்திரம் ஈண்டு ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம்.