பக்கம்:மறைமலையம் 3.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169



முகவுரை

சாலிவாகனசகம் 1834-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் (ஏப்பிரல், 1911) வெளிவந்த நமது ஞானசாகர ஆறாம்பதுமத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கஞ் செய்யப்பட்ட யோக நித்திரை என்னும் இவ்வரும்பெருங் கல்விநூல், இடையிடையே பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல வெளிவந்த அதன் ஏழு எட்டு ஒன்பதாம் பதுமங்களில் தொடர்பாக எழுதப்பட்டு, இப்போது நடைபெறும் ஞானசாகரப் பத்தாம் பதுமத்தின் 6,7ஆம் இதழ்களில் முற்றுப்பெறுவிக்கப்பட்டது. ஆகவே, இந்நூல் முற்றுப் பெறுதற்குப் பதினோராண்டுகள் ஆயினவென்று அறிதல் வேண்டும். இவ்வாறு இது மெல்ல மெல்ல எழுதப் பட்டதனால், சென்ற இருபதாண்டுகளாக இக் கலைத்திறத்தைப் பற்றிய பல நூலாராய்ச்சிகளிற் கண்ட முடிபுகளும், பல்லாண்டுகளாக இடையிடையே ஆழ நினைந்து பார்த்துத் தெளிந்த நுணுக்கங்களும், இதிற் சொல்லப்பட்ட முறைகளை நேரே செய்துபார்த்து அறிந்த மெய்ப்பயன்களும் இதன்கண் இயன்றமட்டும் நன்கெடுத்துக் காட்டி விளக்க இடம்பெற்றேம்.

மக்கள் வாழ்க்கையைப் பலதுறைகளிலுஞ் சீர்திருத்தஞ் செய்து அறியாமையால் வரும் எண்ணிறந்த துன்பங்களையும் எளிதாகப் படிப்படியாய் விலக்கி, உயிரைத் தூயதாக்கி, இப்பிறவியில் அடைதற்கு உரிய மெய்யறிவு இன்பங்களையும், வரும் பிறவியில் நுகர்தற்குரிய பேரறிவு இன்பங்களையும் பிழையாமல் எய்துதற்கு இந்நூல் உண்மை வழி காட்டுவதா மென்பதை இதனைக் கருத்தூன்றிக் கற்று, இதிலுள்ள முறைகளை நன்கு பழகி வருவாரெல்லாரும் தாமே இனிது உணர்வர். இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் பொருள்கள், யாமறிந்தமட்டில், தமிழ்மொழியில் இதற்கு முன் இவ்வளவு அழகாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எவராலும் திருத்தமாக எழுதப்படவில்லை. ஐரோப்பா அமெரிக்கா என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/202&oldid=1624235" இலிருந்து மீள்விக்கப்பட்டது