❖ மறைமலையம் - 3 ❖ |
லுயர்ந்தோராயினும், பகட்டான ஆடை யணிகலன்கள் பூண்டிருந்தாராயினும், அவர்தம் தோற்றத்தையும் அவரிருக்கும் இடத்தையும் சிறிது உற்று நோக்கினால் அவர்தம் அருவருப்புத் தன்மையை எளிதிற் கண்டுணரலாம். உயர்ந்த அறிவோடு உடம்பின் பயிற்சியும் அடையவேண்டுகின்றவர் நாம் மேற்கூறிய முறைகளை எவ்வளவு கருத்தாய்ப் பின்பற்றக் கடமைப்பட்டிருக் கின்றார்கள்! இத்தனை எளிய இன்றியமையாத முறைகளையுங் கைப்பற்றுகின்றவர்க்கு உடம்பிலுள்ள கருவிகள் முற்றும் வேண்டுமளவுக்கு அசைந்து தத்தம் நிலைமையிற் செவ்வையாய் இருக்குமாகையால், அவை பருவம் வரும்முன்னே பழுதுற மாட்டா. இந்நிலையில் நிற்பவர் தமது நரம்பை இறுகப் பிடியாமல் இளக்கி அமைதியாய்க் கிடந்தவளவானே, அறிவு மழுங்காமல் இன்பமும் ஆறுதலும் பயக்கும் அமைதியான தூக்கம் உண்டாகும் என்க.
இனி நரம்பிளக்கத்தால் அமைதித்தன்மை உண்டாதல் போலவே, அமைதித் தன்மையால் நரம்பிளக்கம் உண்டா மென்பதும் உணரல்வேண்டும். அமைதியோடிருக்கும்போது நமதுடம்பிலுள்ள் கருவிகளும் அவற்றை ஒன்றோ டொன்று இணைக்கும் நரம்புகளும் இறுகிய நிலையில் இல்லாமல் இளகிய நிலையிலிருக்கின்றன.ஆனால்,சினம் பகைமை முதலான கொடுங்குணங்கள் தோன்றியவுடனே அவை இறுகிய நிலையை யடைகின்றன.சினங்கொண்டவன் கையை நிலத்தில் அறைவதும், மார்பில் தட்டுவதும், பல்லைக் கடிப்பதும், உதட்டை மடிப்பதும், கண்ணைப் பரக்கத் திறப்பதுங், குதிப்பதும் பாருங்கள்! அப்போதவன் உடம்பிலுள்ள நரம்புகளெல்லாம் எவ்வளவு வலுவாய் இறுகி யெழுந்து நிற்கின்றன! பின் இக்கொடுங் குணங்கள் அவிந்து இளைப்புங் களைப்பும் வந்தால் இந்நரம்புகள் பெரிதுந் தளர்ந்து வலிகுன்றிப் போகின்றன. இங்ஙனங் கொடுங்குணத் தோற்றத்தால் மிக இறுகுதலும்,இளைப்புக் குணத் தோற்றத்தால் மிகத் தளர்தலும் நரம்புகளினிடத்தே காணப்படுதலால் இவையிரண்டிற்கும் நடுத்தரமான அமைதிக் குணம் உள்ள காலங்களிலேதாம் அவை இயற்கையான ஓர் இளக்க நிலைமையில் இருக்குமென்பது உணரப்படும்.
எல்லாக் குழந்தைகளும் பெரும்பாலும் மூன்று வயது வரையில் மிகவும் அமைதியான குணத்தை யன்றி வேறு