பக்கம்:மறைமலையம் 3.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267



11. அறிதுயிலுக்கு ஏற்றவர்


அறிதுயிலிற் செல்லுதற்குரிய இசைவு எல்லா உயிர்களிடத்தும் அமைந்திருப்பினும், மக்கள் சிலரிடத்து அதனை வருவிப்பது எளிதாகவும், வேறு சிலரிடத்து அதனை வருவிப்பது அரிதாகவுங் காணப்படுகின்றன ஆதலால்,பிறர்பால் இதனை வருவித்தற்கு முதன்முதற் பழகுவோர் எளிதாக அதனை வருவித்தற்கு ஏற்றவரைத் தெரிந்தெடுத்து அதனை அவர்பாற் செய்து பார்த்துப் பழகுதல் வேண்டும். அதனை இங்ஙனம் பலகாற் பழகிப் பழகிவரப் பிறகு எத்தகையோரையும் அறிதுயிலிற் செலுத்தும் ஆற்றல் மிகுந்துவரும். ஓரிடத்திற் கூடியிருக்கும் ஓர் ஆயிரம் பேரை ஒருநொடிப் பொழுதில் அறிதுயிலிற் செலுத்தத் தக்க வலிமை வாய்ந்தவர்கள் அமெரிக்கா தேயத்தில் இருக்கின்றனர். கூன், குருடு, சப்பாணி முதலானவர்க்கெல்லாம் இவ்வறிதுயிலை வருவித்து அதன் உதவியால் அவர்க்குள்ள குறைபாடுகளை நீக்கும் ஆற்றல்மிக்கவர்களும் அந்நாட்டிலிருக்கிறார்கள். ஆகையால், இதில் நன்றாய்ப் பழகி ஆற்றல் மிக்கவர்கள் வியக்கத்தக்க அரும் பெருஞ் செயல் எல்லாம் எளிதிற் செய்யமாட்டுவார்கள் என்று அறிந்து கொள்க. அங்ஙனமாயின் முதலில் எளிதாக அறிதுயிலிற் செல்லத்தக்கவர்களைத் தெரிந்து எடுக்குமாறு யாங்ஙனமென்றால் அதனையுஞ் சிறிது காட்டுதும்.

ஏழெட்டுப் பெயரை ஓரிடத்தில் வருவித்து முதலில் ஒருவரைத் தமக்கு எதிரே நிறுத்தி, அவரது நெற்றிக்கு நேரே தம் கைகளை நீட்டி விரல்களைக் கவிழ்த்தபடியாய் நேராகப் படித்து அவர்தம் கண்களைச் சிறிதுநேரம் உற்று யான் என் கைகளை முன்னே இழுக்கும்போது என் கையோடுகூடவே நீர் வருவீர். அங்ஙனம் வரக்கூடாதென்று நீர் முயன்றாலும் உம்மால் முடியாது, நான் விரும்புகிறபடியே நான் சொல்லுகிறபடியே நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/300&oldid=1625775" இலிருந்து மீள்விக்கப்பட்டது