பக்கம்:மறைமலையம் 3.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
303

கொம்புப் பாகற்காயை அவரிடந் தந்து 'இவைகள் குளிர்ந்த நல்ல சுவையுள்ள வெள்ளரிக்காய், இவைகளைத் தின்று பாரும்' என்று கூறினால், அவர் அவற்றை வாயிலிட்டு மென்று நன்றாய்ச் க சுவைத்து மகிழ்ச்சியோடு உண்பர். இந்த வெள்ளரிக்காய்கள் எப்படியிருக்கின்றன?' என்று கேட்டாற், 'குளிர்ச்சியாய் நல்ல சுவையுள்ளனவாய் இருக்கின்றன’ என்று மகிழ்ந்து விடையளிப்பர்.

இன்னும்,மெல்லிய ஒரு சிறு கோலை கோலை அவரது கையிற்கொடுத்து, 'இப்போது நீர் முழங்கால்வரையிற் சேறாய் உள்ள இடத்தில் நடந்து செல்ல வேண்டியிருக்கின்றது; இந்தக் கோலை ஊன்றிக்கொண்டு என்பின்னே கருத்தாய் நடந்துவாரும்' என்று சொல்லி, அவரை யிருக்கையினின்றும் எழச்செய்து நடக்கவிட்டால், அவர் உள்ளபடியே அக்கோலை ஊன்றிக் கொண்டு, தாம் இப்போது நடக்குமிடம் கருங் கற்றரையா யிருப்பினும், அதனைச் சேற்று நிலமாகவே கருதிச், சேற்றினின்றும் வருத்தத்தோடு காலைப் பிடுங்கிப் பிடுங்கி வைத்து நடப்பது போல் நடப்பர். அதன்பின், அவருக்கு அந்நினைவை மாற்றி வேறொரு நினைவினை எழுப்புக. 'நீர் இப்போது அச்சேற்று நிலத்தை விட்டு நல்லதோர் இடத்தில் வந்து அமைதியா யிருக்கின்றீர்' என்று சொல்லி அவரது நெற்றியைத் தொட்டுத் தடவினவுடனே அவர் அங்ஙனஞ் சொன்னபடியே அமைதியாயிருப்பராகலான் அப்போது அவரை நோக்கி 'இதோ உமக்கெதிரே அழகியதோர் ஏரி தோன்றுகின்றது; அதில் தெளிவான குளிர்ந்த நீர் நிரம்பியிருக்கின்றது; அதிலிருந்து வீசுங் காற்று இந்தக் கடுவெயிற் காலத்தில் எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கின்றது! நீர் இந்தக் கடுங் கோடையில் நீண்டவழி நடந்து களைத்துப் போயிருக்கின்றீர்! இந்த ஏரியில் இறங்கிக் குளித்துத் தலைமுழுகி, இதன் பக்கத்தில் உள்ள அந்தப் பூஞ்சோலையிற் சிறிது நேரம் இளைப்பாறி இரும்!' என்று தீர்மானமான குரலில் தெளிவாய்ச் சொல்லுக. அங்ஙனம் சொல்லிய அளவிலே அவர் குறிப்பிட்டமுகமாய் மகிழ்ச்சியோடு உற்றுநோக்குவர். அப்போது பின்னும் 'இந்த ஏரியைப் பார்க்கின்றீரா?' என்று வினவினால் ‘ஆம், பார்க்கின்றேன்',என்பர். 'அந்த ஏரிக்காற்று எப்படியிருக்கின்றது?' எனக் கேட்டால், ‘ஆ! அஃது எவ்வளவு குளிர்ச்சியாயிருக்கின்றது!' என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/336&oldid=1626199" இலிருந்து மீள்விக்கப்பட்டது