பக்கம்:மறைமலையம் 3.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
7


‘அப்பர்’ என்றது தனித் தமிழ்த் தந்தை என்பதைக் குறிப்பது. ‘அமரர்’ என்பதற்குப் ‘போர் மறவர்’ என்பது பாவாணர் குறிப்பு.

அடிகளார் தொண்டின் பயன்பாட்டை நன்கனம் ஆய்ந்தார் மூதறிஞர் செம்மல் வ.சு.ப. மாணிக்கனார். அதனால்,

மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறைபோகாதும் காத்தது; தமிழின் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூய நீராகக் காத்தல் போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித்தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துக்கள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நன் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த் தாய் பெற்றாள். அத்தவமகன் அடிச் சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மை போலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலையடிகள் இன்று பல்கி வருப. ஆதலின் தமிழ் தனித் தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம்” என்றார். (தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும், கட்டுரை)

“பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி (த் தமிழ்) முன்னேறும்” என்பது உறுதி யாயிற்றா என வினாவின், அடிகளாராலேயே மெய்ப்பிக்கப்பட்டமையை,

“தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ்பெற்ற மறைமலையடிகளே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/40&oldid=1628567" இலிருந்து மீள்விக்கப்பட்டது