பக்கம்:மறைமலையம் 3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
9

பிறந்ததா?' என்றும் ‘தமிழ் மிகப் பழையதொரு மொழி’ என்றும் கட்டுரைகள் அந்நாளிலேயே எழுதினார்.

1903இல் கலைநூற் புலமைப் பாடநூல்களுள் ஒன்றாக முல்லைப்பாட்டு இருந்தது. அதற்கு அரியதோர் ஆய்வுரை கண்டார் அடிகள்.

“இப்பாட்டினுள் இடைச் சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். இவற்றுள் முன் வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ்வைந்நூறு சொற்களுள் நேமி, கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வடசொற்கள். யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்டபிறமொழிச் சொற்கள் பதினொன்றேயாம். எனவே இப்பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக; ஏனையவெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்” என்று ஆய்ந்து எழுதுகிறார். (பக்.56)

1906இல் பட்டினப்பாலை கலைநூற்புலமைக்குப் பாடமாக இருந்தது. அதற்கும் ஆய்வுரை கண்டார் அடிகளார்.

“இப்பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பனவாம். ஞமலி என்னும் ஒரு சொல் பூழி நாட்டுக்குரிய திசைச் சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற்பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாய் வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க” என்கிறார். (பக் 77)

தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எண்ணிக் காட்டிய அடிகளார் எழுதிக் காட்டிய அளவில் நின்றாரா? இல்லை! மறுபதிப்புகளில் தம் எழுத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்த பிறமொழிச் சொற்களைக் களைந்தார். அவ்வாறு களைந்ததையும் நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/42&oldid=1628571" இலிருந்து மீள்விக்கப்பட்டது