❖ மறைமலையம் - 3 ❖ |
4. சூக்கும சரீரத் தோற்றம்
பொருத்தமுள்ளனவாய்
னித் தூலசரீரம், சூக்குமசரீரம், குணசரீரம், கஞ்சுகசரீரம், காரணசரீரம் என்னும் நம்முடைய ஐந்து உடம்புகளும் ஒன்றாகக் கட்டுப்பட்டு நின்றாலும், தூல சரீரமும், சூக்குமசரீரமும் நேரே ஒன்றினுடைய வடிவையே மற்றொன்றும் உடையதாயிருக்கும்; குணம், கஞ்சுகம், காரணம் என்னும் மற்ற மூன்று சரீரங்களும் இவ்விரண்டு சரீரங்களினும் வேறு பட்ட சுபாவமுடையனவாய்ச் சூக்குமசரீரத்தைக் காட்டிலும் சூக்குமமானவைகளாயிருக்கும். சூக்கும சரீரம் தூல சரீரத்தின் வடிவையும் பாவனையையுமே உடையதாயிருக்கும் என்பதற்கு மேலே யாம் எடுத்துக் காட்டிய உதாரணமே சான்று. இன்னும் இரண்டொரு காட்டுகின்றோம். எம் மாணாக்கரில் சந்தான கிருஷ்ணன் என்பார் ஒருவர் உளர். இவர் இயற்கை யிலேயே மிருதுவான சுபாவமும், நுண்ணறிவும் உடையவர். இவருக்குச் சூக்குமசரீரத் தோற்றங்கள் கனவிலும் நனவிலும் அடிக்கடி தோன்றுவதுண்டு. இவர் கொஞ்சம் சிறு பிள்ளை யாயிருக்கும்போது, இவருக்கு உறவினரான ஒருவர் வீட்டில் மரணம் அடையும் நிலையிலிருந்தனர். வீட்டிலுள்ள மற்றவர்கள் அவர் படுக்கையைச் சூழ்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இப்படி யிருக்கையில் அங்கே அருகில் நின்ற சிறுபிள்ளையான சந்தான கிருஷ்ணன், “அதோ அதோ!" என்று கூறினார்! அங்குள்ளவர்கள் எல்லாரும் திடுக்கிட்டுச் சுற்றிலும் மேலும் நோக்கினார்கள்; அவர்கள் கண்ணுக்கு ஒன்றுந் தென்படவில்லை; அந்தப் பிள்ளை மாத்திரம் சற்று நேரம் முன் சொன்னபடியே சொல்லிற்று; உடனே மரணாவஸ்தை யிலிருந்தவரைத் திரும்பிப் பார்க்க அவர் பிணமாய்க் கிடந்தார். இன்னும் ஒரு வீட்டில் ஒரு பெண் பிள்ளை நோவாய்க் கிடந்தாள்; இவள் ஈன்ற மக்களில் ஒரு பிள்ளை தூரதேசத்தில் ஒரு வீட்டில் அவளுக்கு நெருங்கின