❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
ம்
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
இனி, மனநிலையை மட்டும் ஒழுங்கு செய்து கொண்டால் உடம்பு செம்மையாகாதோ. உடம்பையும் வேறு தனியே இங்ஙனமெல்லாம் ஒழுங்குபடுத்தல் வேண்டுமோ வெனின்; ஒருவர்க்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் மற்றொருவன் தனது கையில் ஏதுங் குறைபாடில்லாதவனாயினுந், தான் எழுதுதற்குக் கருவியாய்க் கொண்ட இறகும் மையுங் கடிதமுஞ் செவ்வனே அமையாவிட்டால் அவன் அதனை எழுதிமுடிக்க மாட்டுவான் அல்லன். அதுபோலவே மனநிலை செவ்வையாய் இருந்தாலும், அம் மனம் இயங்குதற்கு இடமான இவ்வுடம்பின் அகக்கருவி புறக்கருவிகள் அத்துணையுஞ் செவ்வையாக இராவிட்டால் அம் மனநிலையும் பழுதுபட்டே போகும். மேலும், உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு பெரிதும் நெருக்கமான தொன்றாய் வாய்ந்திருத்தலால், ஒன்றிற்றோன்றுங் குறைபாடு மற்றொன்றிலுந் தாவா திராது. உயிரின் நினைவில் ஒரு குறைபாடு வந்தால் அஃது உடம்பிலுங் காணப்படுகின்றது. உடம்பில் ஒரு குறை நேர்ந்தால் அஃது உயிரின் நினைவையுந் தாக்குகின்றது. இங்ஙனம் ஒன்றிற்றோன்றும் நிகழ்ச்சி மற்றொன்றிலும் உடனே தோன்றுதலை நாம் நாடோறும் ஒவ்வொரு நொடியுங் கண்டறியலாம். நகைப்புக்கு இடமான தொன்றை நினைந்தால் உடனே நமக்கு நகை வருகின்றது; அல்லது நாம் வேண்டுமென்று நகைத்தால் உடனே தானாகவே நகை வருகின்றது. ஒரு துயரமான செய்தியை நினைந்தால் நமது கண்ணில் நீர் கலங்குகின்றது; அல்லது கண்ணீர் சிந்தி அழுவாரை உற்றுப் பார்த்தால் நமக்கு உடனே கண்ணீர் வருகின்றது. இவ்வாறு உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள ஒற்றுமை மிக நெருங்கியதாய் இருத்தலின், மனநிலையை ஒழுங்குபடுத்துங்கால் உடம்பின் நிலையையும் ஒழுங்குபடுத்தல் இன்றியமையாத தேயாம். அல்லாக்கால், தான் வேண்டிய பயனை வேண்டிய படியே பெறுதல் ஏலாது. ஆகவே, இரண்டையுந் திருத்திச் செம்மையாய் வைப்பவர்கட்கு நோய் அணுகா தென்பதும், ஏதோ கால வேறுபாட்டாற் சிறிது அணுகினாலும் மருத்துவர் உதவி இல்லாமலே அதனைத் தீர்த்துக்கொள்ளலாமென்பதும் பெறப்படும். இது கொண்டு மருந்துகளை முற்றுமே கையாள லாகாதென்று யாங் கூறுவதாகக் கொள்ளலாகாது. பாரா முகமாய் இருந்ததானாலும், தொற்றுநோய் கொண்டாரை
.