❖ மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி ❖ |
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி
இவ்வுண்மை மேலெடுத்துக் காட்டிய மெய் வரலாறுகளை ஆராய்ந்து காண்பார்க்கு நன்கு புலனாகும்.
என்றிதுகாறும் விளக்கிப்போந்த இப் பகுதிகளாற், பொருள்கள் தம்மோடு தொடர்புடையாரின் வாழ்க்கையின் இயல்புகளைத் தம்மிற் பதியப் பெற்றனவாயிருக்குந் தன்மை இனிது பெறப்படுவதாகும். இவ்வுண்மை கண்டே உலகத்தாருந் தமக்கு அன்பராயினார் இறந்துபட்டவிடத்து, அவரது வடிவம் வரைந்த ஓவியத்தையும், அவர் அணிந்திருந்த ஆடையணி கலன்களையும், அவர் புழங்கிய ஏனங்களையும், அவர் இருந்த ருக்கைகளையும், அவர் உறைந்த இல்லங்களையும் பேணி வைத்து அவற்றிற்கு வழிபாடு ஆற்றுகின்றனர். இவையெல்லாப் பொருள்களும் தம்மையுடையவரின் இயல்புகள் பதியப் பெற்றிருக்கின்றன; ஊற்றுணர்வு நுட்பமுந் தெளிவுக்காட்சியும் வாய்ந்தவர்கள் இவற்றின் அண்டையில் வந்து இவற்றைத் தொட்டவுடனே, இவற்றை யுடையராயிருந்தவர் தம் வரலாறு களை நேரேயிருந்து கண்டவர்கள்போல் நன்கெடுத்துக் கூறிவிடுவார்கள். இவ்வுண்மையை யறிந்தமையினாலே தான் பிறரைத் தம்வயப்படுத்துதற்கு முயலும் மந்திரக்காரர் அவர்தம் கூந்தலில் ஒரு சிறு மயிர்ச்சுருளையேனும் அல்லதவர் அணிந்திருந்த ஆடையணிகலன்களுள் ஒன்றையேனும் கைப்பற்றிக் கொண்டு, அதனை வைத்து மந்திரஞ்செய்து அவரைத் தம் வயப்படுத்திக் கொள்கின்றனர்.
ஒருவரோடு சேர்ந்திருந்த பொருள்கள் அவர்க்குரிய எல்லா இயல்புகளும் பதியப் பெற்றிருத்தலால், அவற்றுள் ஒன்றைக் கருவியாகக் கொண்டு அவரை வசியஞ் செய்தல் இயலுதல் போலவே, அவர்க்கு நேர்ந்த நோய் வறுமை மனக்கவலை முதலான துன்பங்களையும் அதன் வாயிலாக நீக்கலாம். ஒருவர்க்குரிய ஒரு மயிர்ச்சுருளாவது, அல்லதவரது கணையாழியாவது நல்லோர் ஒருவரது கையிற்பட்டால் அதற்குரியவர் நோய் முதலிய துன்பங்களினின்றும் நீங்கி நலம்பெறுவர். நல்லோரின் நன்னினைவும், நல்லெண்ணமும் அப் பொருளின் பதிவுகள் வழிச்சென்று அவற்றையுடையார்க்கு நன்மையைத் தருவனவாகும். அவை தீயோர் கைப்படின் அவர் தம் தீயநினைவுந் தீய எண்ணமும் அவற்றையுடையார்க்குத்