பக்கம்:மறைமலையம் 4.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
218

❖ மறைமலையம் 4 ❖

தண்ணீரைத் தூயபாண்டம் ஒன்றில் முகந்து வந்து அவ்விரு சிறு குடங்களிலுங் கழுத்தளவு நிரப்புக. ஐந்திலையுள்ள மாங்கொத்துகள் இரண்டு ஒடித்துக் கொணர்ந்து, அவ்விரு குடத்தின் வாயினுள்ளுங் காம்பின் புறத்தை நுழைத்து, மேலே இலைகளை விரித்து, அவற்றிடையே இரண்டு நல்ல குடுமித் தேங்காய்களைக் குடுமி மேல்நோக்குமாறு வைத்திடுக. அதன்பின், வலது புறத்துள்ள குடத்திற்குப் புதிய வெள்ளிய ஆடைத்துண்டு ஒன்றும் இடதுபுறத்துள்ள குடத்திற்கு புதிய சிவந்த ஆடைத் துண்டு ஒன்றும் அணிக. வலதுபுறக் குடத் திற்குத் திருநீறுஞ் சந்தனமும், இடதுபுறக் குடத்திற்குத் திருநீறுஞ் சந்தனமும் மஞ்சளுங் குங்குமமும் இடுக. மணங்கமழும் இனிய மலர்மாலைகளை இரண்டுக்குஞ் சூட்டுக. வலக்குடத்தின் நீரின் உள்ளே சிவப்புமணியும் இடக்குடத்தின் நீரின் உள்ளே நீலம் அல்லது பச்சை மணியும் இடுதல் மிக நன்று. அவை வாயா வாயின், இரண்டினும் இரண்டு பொற்காசேனும் இரண்டு வெள்ளிக்காசேனும் இடலாம். குடங்களின் இருபுறத்தும் இரண்டு நெய்விளக்குகள் ஏற்றுக. அக் குடங்களுக்கு எதிரிலே மற்றொரு வாழையிலை விரித்துப் பழ வகைகள், பாலடிசில் நெய்யடிசில் சர்க்கரைப்பொங்கல், பாயசம், வடை முதலியன இயன்ற மட்டும் படைத்தற்கு ஒழுங்குசெய்து வைத்தல் வேண்டும். பக்கத்தே ஒரு கிண்ணத்தில் நெய்யும், அதனை எடுத்து விடுதற்கு மாவிலையை மடித்துத் தைத்த ஒரு சிறு அகப்பையுந், தூவுதற்கு நெற் பொரியுஞ் சந்தனத் துாளும், இறைவனைப் போற்றி வணங்குதற்கு விடு பூக்களும் வைத்துக்கொள்க. நோன்பு இயற்றுவோர் இப்போது புறத்தும் அகத்தும் வேள்வி வேட்க வேண்டியவராயிருத்தலால், அவர் அங்கு வரைந்துள்ள முக்கோணத்தின் கிழக்கு முனைக்குச் சிறிது விலகி ஒரு பலகைமீது அமர்ந்து, திருநீற்றைக் கையில் அள்ளி, அதிற்றண்ணீர்விட்டுக் குழைக்கையில், “ஓம் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் காண்க' என்னும் மந்திரஞ் சொல்லிக் குழைத்து, அதன்பின் “ஓம் நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி” என்னும் மந்திரத்தை ஒருகாற் சொல்லித் தலையின் உச்சியிலும், பின்னும் ஒருகாற் சொல்லி நெற்றியிலும், அங்ஙனமே மார்பிலுங் கொப்பூழிலும் முழந்தாள் இரண்டிலும் அதனைத் தீற்றி, அதன் பின் மறுபடியும் “ஓம் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் காண்க” என்று சொல்லித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/251&oldid=1675500" இலிருந்து மீள்விக்கப்பட்டது