❖ மறைமலையம் 4 ❖ |
இனித் தோன்றுவது அருமை!
மறைமலையடிகளாரது கல்விப் பெருக்கத்தையும், நுணுகிய ஆராய்ச்சித் திறத்தையும் மிக நெருங்கி அனுபவித்தவர்களுள் நானும் ஒருவன். அவர்கள் பாடஞ்சொல்லும்போது மாணவர் அனைவரும் மிக்க குதூகலத்தோடு கேட்டு மகிழ்வர். அவர்களது சங்க இலக்கியப் பயிற்சி எங்களையெல்லாம் மிகவும் வசீகரித்தது. பிற உரைகாரர்களோடு மாறுபட்டுத் தமது கருத்தை அவர்கள் வெளியிடும் பெருமிதத்தை இன்று நினைத்தாலும் எனது உள்ளம் உருகுகிறது. அவர்களைப் போன்ற பேராசிரியர்கள் இனித் தமிழ்நாட்டில் தோன்றுவது மிகமிக அருமை என்றே சொல்லலாம். உயர்ந்த குறிக்கோளும், சீரிய தமிழ்ப் பண்பும், ஆழ்ந்தகன்று நுணுகிய தமிழாராய்ச்சியும், சைவ ஒழுக்கமும், சைவ சமயப் பற்றும், சைவ நூல்களில் தெளிந்த உணர்ச்சியும் அவர்கள் பால் நான் கண்டதுபோல வேறு எவரிடத்திலும் கண்டதில்லை. அவர்களுடைய பேச்சின் இனிமையும் வன்மையும், எழுத்தின் அழகும் வன்மையும் தமிழ் மக்களை வசீகரித்துவந்தன என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மையே. நான் படித்து வருங்காலத்தில் என்பால் அவர்கள் தனியன்பு காட்டிவந்தார்கள் என்பதை நினைக்குந்தோறும் என் மனம் பெரிதும் வருந்துகிறது. அவர்களுடைய நினைவைத் தமிழ் மக்கள் என்றும் பாராட்டும் கடமையுடையவர்.
– அறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை, பி.ஏ.பி.எல். சென்னைப் பல்கலைக்கழகம்.
(பக் 41-42)