52
மாணவர்களுக்கு
உண்மை உண்டானால், வாக்கில் வன்மை உண்டாகும் என்பது சான்றோர் வாக்கு, இதிலிருந்து தெரிவது என்னவெனில், பேச்சு தெளிவாக இருக்க வேண்டுமானால், அதற்கு முன்னே உள்ளம் தெளிவாக இருக்கவேண்டும் என்பதே, உள்ளத்தில் தெளிவில்லாதவர்கள் குளறுபடியாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் பேசுவதைக் காணலாம்.
தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதிலும் கவலை எடுத்துக் கொள்ளவேண்டும். 'ழ' என்ற எழுத்து நம் தமிழ் மொழியில் மட்டுமே உண்டு. பிற மொழிகள் எதிலும் இல்லை. இதனால் தமிழறிஞர்கள் இதனைச் சிறப்பு ழகரம் என்பார்கள். தமிழுக்கே சிறப்பாயுள்ள இச் சிறப்பு ழகரம் தமிழ்மக்களாலேயே சரிவர உச்சரிக்கப் படுவதில்லை.
வாழைப்பழம் என்பதை சிலர் வாளப்பளம் என்பார்கள்
வாழைப்பழம் என்பதை சிலர் வாயப்பயம் என்பார்கள்
மார்கழித் திருவிழா என்பதை சிலர் மார்கசி
திருவிசா என்பார்கள்.
இழுத்துக்கொண்டு போனான் என்பதை சிலர் இஸ்துகினு போனான் என்பார்கள். இது தவறு. தமிழைத் திருத்தமாக எழுதுவதைப் போலவே தெளிவாக உச்சரிக்கவும் பழகியாக வேண்டும்.
அதுமட்டுமல்ல. மாணவர்களாகிய நீங்கள் எந்த மொழியையும் வெறுக்கக் கூடாது. எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் நம் தாய் மொழியாகிய தமிழை ஆழமாகக் கற்றுக் கொள்ளவேண்டும். எந்த மொழியை எழுதினாலும் பேசினாலும் அந்தந்த