இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15
பொருள் வாங்குவதற்காகப் பெருமானார் அவர்கள் கடைக்குப் போகும்பொழுது, வழியில் இருக்கும் ஏழை எளியவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி, “முஹம்மது கடைக்குப் போகிறார், உங்களுக்குத் தேவையான பொருள்களைச் சொல்லுங்கள், வாங்கி வருகிறேன்” என்று கூறுவார்கள். அவர்கள் சொல்லும் பொருள்களை அவ்வாறே வாங்கி வந்து தருவார்கள்.
மக்காவிலுள்ள குறைஷி இனத்தவர்களுக்கு வியாபாரமே முக்கிய தொழிலாக இருந்து வந்தது.
பெருமானார் அவர்களின் மூதாதையருக்கும் அதுவே தொழிலாக இருந்தது.
ஒரு வியாபாரிக்கு வேண்டிய முக்கிய அம்சங்களான நம்பிக்கையும் வாக்குறுதியும் பெருமானார் அவர்களிடம் முழுமையாக அமைந்திருந்தன.
அப்துல்லாஹ் இப்னு அபில் அம்ஸா என்னும் வர்த்தகருக்கும் பெருமானார் அவர்களுக்கும் சரக்குகள் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.