பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

93


109. ஆனந்தக் கண்ணிர்

போர்ப்பறை கேட்டு போருக்கென எழுந்தான் போர் வீரன். கச்சை கட்டி கையில் வேல் பற்றிப் பெற்ற தாய் முன் சென்று நின்றான். மகன் மார்பைத் தடவிப் பார்த்தாள். “மகனே வெற்றி பெறுக!” என்று வாழ்த்தினாள். அவளுக்கு வயது நூறு இருக்கும். தள்ளாடும் பருவம் கொக்கின் இறகைப் போல் வெளுத்த தலைமயிர்

போர் முடிந்து பலர் திரும்பி வந்தனர். தன் மகன் யானையைக் கொன்று விட்டுத்தான் இறந்தான் என்று கேள்விப்பட்டாள். கண்ணிர்த் துளிகள் சிந்தின. மழை பெய்த மலை மூங்கிலிருந்து மழைத் துளிகள் வீழ்வன போல் மிகுதியான துளிகள் வீழ்ந்தன. ஆனந்தக் கண்ணிர் அது. மகனை பெற்றெடுத்த போது மகிழ்ந்ததை விடப் பெருமகிழ்ச்சி கொண்டாள்.


110. பெற்ற நாளினும் பெரிது மகிழ்ந்தாள்

வயதான மறத்தி, நரம்பு புடைத்துத் தோன்றியது தோள் மெலிந்திருந்தது. தாமரை இலை போல் அடி வயிறு ஒட்டியிருந்தது. போருக்கு சென்ற புதல்வனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

“போர்க்களத்தில் உன் மகன் புறங் கொடுத்தான்” என்று கூறினர் பலர். அது கேட்டு ஆர்த்தெழுந்தாள் அம் முது மகள்.