அருளிச் செயல்களில் அடிகள் 333
திருப்பெருந்துறையில் குருநாதன் பால் மெய்ஞ்ஞான உபதேசம் பெற்ற அடிகள் பித்தர் போன்று தாம் செய்வது இதுவென உணராது இறைவன்பால் அளவிலாப் பேரன்புடன் விளங்கிய அடிகளின் நிலை,
வஞ்ச கப்பெரும் புலைய னேனை உன்
கோயில் வாயிலிற் பிச்ச னாக்கினாய்
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி (179)
--திருவம்-5
பித்தென்னை யேற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை-அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திருவாப் பேரின்பம் வந்து (620)
-திருவெண்-6
என வரும் அடிகளின் அருளிச்செயல்களால் நன்கு தெளிவாகப் புலனாகும்.
உலகப் பொருளனைத்தும் இறைவன் உடைமையே என்பதைத் தெளிவாக உணர்ந்தவர் வாதவூரடிகள். இதனால் தாம் குதிரை வாங்கக் கொணர்ந்த பொருளை யெல்லாம் இறைவனிடம் ஒப்புவிக்கின்றார். தாமும் சித்தம் சிவமாக்கப்பெற்றுச் சீவன் முத்தராகின்றார். உலகியல் பற்றிய விருப்பு வெறுப்பு இல்லாத நிலையை அடைகின்றார். பிராரத்தம் காரணமாக உடலுக்கு இன்பம் வரினும் துன்பம் வரினும் இன்பத்தில் மகிழ்தலும் இல்லை; துன்பத்தில் வருந்துதலும் இல்லை. "பரஞானத்தால் பரனைத் தரிசித்தோர், பரமே பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்" என்று சித்தியார் கூறுவது இந்த நிலையையேயாகும். பரமுத்தி