பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பேராசிரியர் ந.சஞ்சீவி மழையும் இருப்பது கண்டு எக்களிப்புக் கொண்ட வீர மறவர்கள் எல்லையற்ற ஊக்கத்தோடும் வரம்பில்லா வீர உணர்ச்சியோடும் பெரும்போர் உடற்றினார்கள். சிறுவயல் காட்டிற்குள் நுழைந்து நான்கு மைல் போவதற்குள் கம்பெனிப்படைகள் கலகலத்துப் போய்விட்டன. அவர்கள் துன்பத்தையும் துயரத்தையும் எல்லையற்றவையாக்கியது தமிழர் ! {^{i}|... சிறுவயலையும் காளையார் கோவிலையும் இணைக்கும் காட்டிலே நடந்த கடும்போரில் கம்பெனிப்படைகட்கு ஏற்பட்ட உயிரிழப்புச் சொல்ல முடியாது. காளையார் கோவில் காட்டில் ஒவ்வோர் அடித் தொலைவைக் கடப்பதும் கம்பெனிப் படைகட்குப் பகீரதப் பிரயத்தனமாய் இருந்தது. காட்டின் நடுவில் காவல் கொத்தளம் ஒன்றைக் கட்டும் முயற்சியில் கம்பெனிப் படைகள் கணக்கற்ற வீரர்களைப் பலி கொடுத்தும், சொல்ல முடியாத இழப்பை ஏற்றும் சோர்ந்தன. அவ்வாறிருந்தும், ஆங்கிலக் கம்பெனியின் படை உயிர் பிழைத்ததற்கு முக்கிய காரணம், புதுக்கோட்டைத் தொண்டைமானோடு தோளோடு தோளாய் நின்று எட்டையபுரத்துக் கூலிப்படைகள் செய்த துரோகமே ஆகும். இதோடு கம்பெனி அதிகாரிகள் மறவர் இனத்தைப் பிளவுபடுத்தச் செய்த சூழ்ச்சிகளும் ஓரளவு வெற்றி கண்டன. முக்கியமாகக் கம்பெனி அதிகாரிகளால் மருது பாண்டியர்கட்கு எதிராகப் பொம்மை ராஜாவாக உடையணத்தேவன் என்பவன் உருவாக்கப்பட்டான்; அவன் மாமன் மருது பாண்டியர் சேனையின் மறைகளை எல்லாம் அறியக் கூடிய முக்கிய நிலையில் இருந்தான். அவன் திடீரென ஈனவாழ்வை விரும்பி, மாணவாழ்வைத் துறந்து, மருது பாண்டியர்கட்கு முதல் தரமான துரோகம் புரிந்தான். அப்போது கம்பெனிப்படைகளின் முக்கியத் தளபதியாய் இருந்தவனும், பாஞ்சைப்பதியின் அழிவுக்குக் காரணமாய் இருந்த பாதகனும் ஆகிய கர்னல் அக்நியூ துரையின் காலில் அடைக்கலம்' என்று வீழ்ந்தான். அத்துரோகி அக்நியூதுரையின் அருகிற்சென்று இரகசியங்களும் பேசினான். மருது பாண்டியர்களது சேனையைப் பற்றியும் அவர்களுடைய போர்த்திட்டங்கள் பற்றியும் எல்லாச் செய்திகளையும் கூறித் தன் இனத்தவரையே காட்டிக் கொடுத்தான் அக்கல் நெஞ்சன். இத்தகைய துரோகச் செயல்கள் தங்களைச் சுற்றி நடந்து கொண்டிருந்த போதிலும் வீரமிக்க மருது பாண்டியர் சிறிதும் மனம் தளராது, வீரமறவர் அல்லமோ நாம்' என ஆவேசம் கொண்டு, உயிரினும் மானம் பெரிது, என்று போரிட்டனர். இப்போரில் நேரடியாகப் பங்கு கொண்டிருந்த கர்னல் வெல்ஷ் கூறுவது போல, இருபதாயிரம் தமிழ் மறவர்கள் தமிழகத்தின் விடுதலைக்காக வீரப்போர் நடத்தினர். மண்ணைப் பறிக்க நடந்த போர் அன்று அது தாய் நாட்டின் மானத்தைக் காக்க நடந்த போர். அப்போரில்