பக்கம்:மாபாரதம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

163


ஆரம்ப ஆசிரியன் ஆன கிருபனும், அருச்சுனன் பால் நேசம் கொண்ட துரோணனும், அரசியல் காமராசராக விளங்கிய விடுமனும் வில்லைத் தாங்கிய விதுரனும் அமைதி தரும் ஆக்கத்தை அடித்துச் சொல்லினார்கள். கன்னனும் துரியனும் அவற்றைக் கேட்க மறுத்தனர். ‘நகம் மழுங்கிய கிழட்டுப்புலிகள்’ எனக் கன்னன் அவர்களை அவமதித்தான். வீடுமனும் கன்னனைக் கடிந்து பேசினான். அவன் இதுவரை அருச்சுனனிடம் அடைந்து வந்த தோல்விகளை எடுத்துக் கூறினான். பன்முறை தோற்றும் படிப்பினை பெறவில்லையே என்று பாடிச் சொன்னான். கேடு நினைப்பவர்க்கு நல்ல அறிவுரைகள் ஏற்கப் போவதில்லை என்றான்.

ஆத்திரத்திலும் பேராசையிலும் பகைமையிலும் சிக்கிய அவர்கள் ஆவேச உரை பகர்ந்தனர். போரில் சந் திக்கலாம் என்று பேசி அனுப்பினர்.

சல்லியனின் ஏமாற்றம்

நகுல சகாதேவர்களின் அன்னை மாத்திரிக்குச் சல்லியன் உடன் பிறந்த சகோதரன். அவன் மத்திர நாட்டு அரசன். உபப்பிலாவிய நகரத்தில் பாண்டவர்கள் போருக்கு அணி வகுக்கின்றனர் என்பது அறிந்து படை யுடன் அவர்கள் இடம் நோக்கிச் சென்றான். அதை அறிந்து உதவி செய்யவழியில் துரியன் தன் ஆட்களை அனுப்பி அவனுக்கு உணவு, இடம் முதலிய வசதிகள் தந்து மகிழ்வித்தான்; தனக்கு உபசாரங்கள் செய்தலுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். பாண்டவரே விருந்து தந்தனர் என்று அவர்கள் பால் அன்பு கொண்டான். துரியன் தான்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்தது என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/166&oldid=1048217" இலிருந்து மீள்விக்கப்பட்டது