பக்கம்:மாபாரதம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

219


இப்போர்களில் பார்த்தனின் மகனாகிய அபிமன்யுவும் துரியன் மகனாகிய இலக்கண குமரனும் போர் நிகழ்த் தியது சிறப்பு நிகழ்ச்சியாகும். அபிமன்யு அவன் தேரையும் குதிரைகளையும் பாகனையும் அழித்துவிட்டு அவனை உயிரோடு பற்றிக் கொண்டு தன் தேரில் அமர வைத்து இழுத்துச் சென்றான்; அவன் சிறைக் கைதியாயினான். சிந்துபதியாகிய சயத்திரதன் என்பவன் துரியன் தங்கை துச்சளையின் கணவன். தன் மைத்துனன் சிறைப்படுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனைப் பின்தொடர்ந்து அவனைத் தடுத்துப் போர் தொடுத்தான்

சயத்திரதன் அபிமனைத் தடுத்து நிறத்தினான். எனினும் எதிர்கக ஆற்றல் அற்றவனாய்த் தோள் வலி இழந்தான். அவனுக்குத் துணையாகக் கன்னனும் மற்றவர்களும் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அபிமனின் அம்புக்கு ஆற்றாமல் அவர்களும் சிதறி ஓடினர். அவர் களுக்குத் துணையாக வந்த மத்திர நாட்டு அரசனாகிய சல்லியன் மீது கணைகளைச் செலுத்தி அவனைத் தேரினின்று இறங்கவும் செய்தான்; சல்லியன் கதை கொண்டு அபிமனைத் தாக்கக் கையோங்கினான். அப்பொழுது வீமன் இடையிட்டு அவனை நன்கு மொத்தினான். சல்லியன் கீழே விழுந்தான். நீ அவனைத் தாக்கினால் என் ஆண்மை என்ன ஆவது என்று தன் பெரிய தந்தையிடம் அபிமன்யு கடிந்து கொண்டான். அபிமன் வீமனோடு உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இலக்கணன் விரைவாகத் தேரில் இருந்து இறங்கி ஒடித் தனது தேரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் யாதவ குலத்தலைவனாகிய கிருதவர்மன் தரையில் விழுந்த சல்லியனைத் தனது பெரிய தேரில் ஏற்றிக் கொண்டு இலக்கணனையும் உடன் வரச்சொல்லி அவனைத் தப்புவித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/222&oldid=1046524" இலிருந்து மீள்விக்கப்பட்டது