பக்கம்:மாபாரதம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

மாபாரதம்


அபிமன்யுவின் அழிவு
பதின்மூன்றாம் காட்போர்

கன்னன் கழறிய கடுமொழியால் சுடுஞ்சினம்கொண்டவனாய் முன் நாட்போரை விட முனைப்பாகப் போர் செய்யத் தம் படைகளைத் துரோணன் கடாவினான். இலக்கண குமரனும், துரியனின் தம்பியரும், கலிங்கனும், சிந்து நாட்டு அரசன் சயத்ரதனும் ஒன்று கூடி முன்னேறினர். சக்கர வியூகம் அமைத்துச் சதுரங்க சேனைகளைச் செயல்படுத்தினர்.

துருபதன் மகனாகிய திட்டத்துய்மன் பாண்டவர் படையை மகர வியூகமாக அமைத்தான். துரியனின் திட்டப்படி திரிகர்த்தனும், சம்சப்தகர் மன்னர் சிலரும் விசயனைப் பழையபடி போருக்கு அழைக்க அதைப் புறக் கணிக்க முடியவில்லை. தக்க படை வீரர்களோடு அவர்கள் இருந்த தென்திசை நோக்கிப் படையைச் செலுத்தினான். விசயன் அவர்களோடு கடும்போர் செய்து குருதி யால் மண்ணைச் சிவப்பாக்கினான்.

விசயன் திசை திருப்பப்பட்டுத் தருமனை விட்டு விலக் கப்பட்டான். அதைப் பயன்படுத்திக் கொண்டு துரோணன் தருமனைச் சிறைப்பிடிக்கத் திட்டத்துய்மனோடு போர் செய்தான்; அதில் துரோணனே வெற்றி பெற்றான். பின்னிட்ட திட்டத்துய்மனைத் தருமன் அணைத்துக் கொண்டு “நீயே துரோணனுடன் போர் செய்ய முடியாமல் பின்னடைந்தாய் என்றால் யார்தான் அவரோடு போர் செய்யப் போகிறார்கள்?” என்று கூறிச் செயல் இழந்தான்.

அங்கு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்த விசயனின் மகன் அபிமன்யுவை அழைப்பித்து “நீ தான் இச்சக்கர வியூகத்தை முறியடிக்க வேண்டும்” என்று கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/227&oldid=1047223" இலிருந்து மீள்விக்கப்பட்டது