பக்கம்:மாபாரதம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

225


மூத்த தந்தை யாத்த ஏவலைத் தாங்கித் தேரின் மேல் கதிரவனைப் போல் ஏறினான். துருபதன் மகனாகிய திட்டத்துய்மனும் மன்னர்கள் பலரும் இருபுறமும் துணையாக வரச் சக்கர வியூகமாக நின்ற எதிரிகளை அதன் ஆரைகளாகச் சிதைத்தான் தன் மாமன் ஆகிய அச்சு தன் பெயரைச் சொல்லி ஆயிரக்கணக்கான அம்புகளை அபிமன்யு ஏவினான். மழையைத் தடுக்க மலையைக் குடை யாகப் பிடித்த மாயவன் என அவ்வம்புகளைத் துரோ ணன் தடுத்து மடக்கினான். எனினும் அவன் வலி அழிந்தது; வில்லாசிரியன் என்ற புகழ் அழிந்தது; வில் அழிந்தது; தேர் அழிந்தது. முடிவில் அவன் தோல்வியையும் அடைந்தான்.

உலகம் மதிக்கும் வீரனாகிய கன்னன் களத்தில் புகுந்தான். அவனும் அபிமன்யுவின் தாக்குதலுக்குத் தளர்ச்சி அடைந்து தன் தேரில் ஏறி வந்தவழி பார்த்துக் கொண்டு சென்றான். சீறும் சிங்கத்திடம் தான் மாறி நின்றால் வேறுபட வேண்டும் என்பதை உணர்ந்தான். கிருபனும் கிருதவர்மனும் இரட்டையராக நின்று அம்புகளைச் சொரிந்தனர். அபிமன்யு தன் ஒரே அம்பால் அவர்கள் ஏந்திய இரண்டு வில்களையும் நான்காக ஆக்கி அனுப்பினான், சகுனியும் அவன் மகனும் சகுனம் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று வேதனைப் பட்டார்கள். மகனைக் களத்தில் பறிகொடுத்து விட்டுச் சகுனி பரிதாபமாகச் சென்றான்.

வீகர்ணனும் துன்முகன் முதலிய தம்பியரும் மான் வேட்டை என அபிமன்யுவை நெருக்கினர். அபிமன்யு அவர்களை நோக்கி “எனக்கு நிகர் நீங்கள் ஆக மாட்டீர்; அருமையான உயிர் அதனை என்னால் இழக்கவேண்டாம்; உயிர் தப்பி ஓடி விடுங்கள்” என்று சொன்ன அளவில் அவர்கள் அந்தத் திசை பாராமல் திரும்பி ஒடித் தப்பினர்.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/228&oldid=1048257" இலிருந்து மீள்விக்கப்பட்டது