பக்கம்:மாபாரதம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

49


துரோணன் குரு தக்களை கேட்டல்

சீடர்கள் காட்டிய சீர்மைகளைக் கண்டு ஆசான் துரோணன் அகமகிழ்வு கொண்டான். அவர்கள் வில் திற னையும், மல் திறனையும் பாராட்டினான். அவர்கள் கல்வியில் முழுமை எய்தியதாக முடிவுரை கூறினான்.

“இளஞ்சிங்கங்களே! இப்பொழுது உங்களுக்கு ஒரு தேர்வு வைக்கிறேன். உங்கள் வீரத்தைக் காட்ட விளை நிலம் காட்டுகிறேன். என் இளமை நண்பன் முதுமைப் பகைவன் பாஞ்சால நாட்டுத் துருபதன், அவனைக்கட்டித் தேரில் வைத்துச் சிறைப்படுத்திக் கொணர்வீர்; இதுவே உம்மிடம் எதிர் பார்க்கும் காணிக்கை.” என்று வீரம் ததும்ப உரையாற்றினான். ஆசிரியன் கட்டளையை ஏற்றனர்.

துரியன்முதல் நூறு பேரும் பாண்டவர் ஐவரும் படைகளுடன் பாஞ்சாலம் நோக்கிப் புறப்பட்டனர். அவரர்களுக்கு இது கன்னிப் போராக அமைந்தது. சோமகர்க்கும் குருகுலக் கோமகர்க்கும். போர் விளைந்தது கண்டு துருபதன் வருந்தினான். விசயனைப் போர்க் களத்தில் சந்தித்தான்.

படை வலிவு மிக்க துருபதன் நெருங்கி வந்து போர் செய்தான். துடை நடுங்கித் துரியன் சொந்தநாடு நோக்கித் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டான். விசயன் தனி ஒருவன் அம்புகளைக் கொண்டு துருபதனை மடக்கிப் பிடித்தான். அவன் கைவாளுக்கு அஞ்சி அடி பணிந்து அடிமையாயினான்; அவன் தன் வில்லின் கயிறு கொண்டே அவனைத் தேரில் கட்டி ஏறும்படி செய்தான். அவனைத் தேரில் கட்டிக் கொணர்ந்து தேசிகன் முன் கொண்டு வந்து நிறுத்திப் பேச வைத்தான்.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/52&oldid=1034978" இலிருந்து மீள்விக்கப்பட்டது