பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமன்னரும் அரசமாதேவியாரும் நாள் தோறும் இளவரசியை வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள். நாளுக்கு நாள் இளவரசியின் உடல் இளைத்துக் கொண்டு வந்தது. இளைக்க இளைக்க அவள் உடலில் புது அழகுபொலிந்துதோன்றியது. ஒவ்வொரு நாளும் அவள் முகத்தைப் பார்க்கும் போது அது முன்னைக் காட்டிலும் அழகுடன் விளங்கியது.

இப்படி ஒரு வாரம் கழிந்தது. மாமன்னர் சோமசுந்தர மாராயரால் தன் மகள் நிலையைக் கண்டு பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இருபத்தெட்டுத் தேசங்களைக் கொடுத்தாலும் இப்படிப்பட்ட அழகான இளவரசியைக் காப்பாற்றுவதற்கு ஈடாகாது என்று எண்ணினர். தம் மகளைக் காப்பாற்ற எதை வேண்டுமானுலும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். கோயிலுக்குச் சென்றபோது குருக்களிடம் தம் முடிவைக் கூறினார்.

27