பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

61

வைக்கவும், ஐந்தாறு சமையல்காரர்களை அமர்த்தி வைக்கவும் எழுதி இருக்கிறேன்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள்:- (சிறிது கவலையோடு) அப்படியா! நம்முடைய பெரிய தம்பிக்கு இந்த விஷயத்தில் எல்லாம் அதிக அனுபோகம் உண்டு, சின்னத்தம்பி இப்படிப்பட்ட காரியங்களை எல்லாம் செய்து பழகியதில்லை. அவனுக்குத் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், அவனுடைய பள்ளிக்கூடத்துத் தோழனும், இந்த ஊர் மிராசுதார் அண்ணாசாமி முதலியாருடைய மகனுமான கோபாலசாமி அவனுடைய ஜாகைக்குப் பக்கத்தில், உள்ள ஹோட்டலில் இருந்து வருகிறானாம். அவனும் இவனும் எப்போதும் இணைபிரியாதிருப்பார்கள். அவன் இந்த விஷயத்தில் எல்லாம் நிரம்பவும் சமர்த்தன். அவன் எல்லாக் காரியங்களையும் திறமையாக முடித்து வைப்பான் என்று நினைக்கிறேன்" என்றாள். வேலாயுதம் பிள்ளை, "சென்னப் பட்டணத்தில் பணம் மாத்திரம் கையில் ஏராளமாக இருக்க வேண்டும். ஒரு நாழிகை சாவகாசத்தில் ஆயிரம் கலியாணத்துக்கு வேண்டிய சகலமான சாமான்களையும் சேகரித்து விடலாம். நாம் எல்லோரும் போய் இறங்குவதற்கு வசதியான இடம் இருக்கிறது. அங்கே போனால், எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம். அதைப்பற்றிக் கவலை. இல்லை" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஆம், அதிருக்கட்டும்; நிச்சயதாம்பூலம் மாற்றும் போது; நாம் முதலில் பழம் பாக்கு வெற்றிலை முதலிய வைகளை வைக்க வேண்டுமே, அப்போது வழக்கமாக எல்லோரும் செய்கிறது. போல நாம் நம்முடைய கௌரதைக்குத் தகுந்தபடி ஏதாவது புடவை, நகை, பரிசப்பணம் எல்லாம் வைக்க வேண்டுமல்லவா" என்றாள்.

வேலாய்தம் பிள்ளை, "அதைப்பற்றி உனக்கு ஏன் சந்தேகம் உண்டாகிறது? அவர்கள் பெரிய கலெக்டர் உத்தியோகத்தில் உள்ளவர்களாயிற்றே. அவர்கள் பரிசப்பணத்தை ஏற்றுக் கொள்ளுவார்களோ மாட்டார்களோ என்று சந்தேகிக்கிறாயோ" என்றார்.