140
மாயா விநோதப் பரதேசி
இருவரும் எவருடைய இடைஞ்சலும் இல்லாமல் ஏகபோகமாய் இருக்கலாம். கொஞ்சகாலம் பொறுத்துக்கொண்டு அநேகமாய் அந்தக் காலம் நெருக்கத்தில் வந்துவிட்டதென்றே நினைக்கிறேன்" என்று கூறி முடித்தாள்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் வெகு நேரம் வரையில் உல்லாசமாக இருந்த பின் ரயிலடியில் சந்திப்பதென்ற முடிவோடு பிரிந்து போயினர்.
★★★
அன்றைய பகற்பொழுது கழிந்தது. இரவில் சென்னைக்குப் போகும் ரயில் வண்டி வருவதற்கு ஒரு நாழிகை காலத்திற்கு முன்பு, இடும்பன் சேர்வைகாரன் குதிரை வண்டியோடு ரமாமணியினது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவ்விடத்தில், புறப்பட ஆயத்தமாக இருந்த ரமாமணியும், அவளது பெற்றோரும் உடனே வந்து வண்டியில் ஏறிக்கொண்டனர். மூட்டைகளை எடுத்து வைப்பதற்காகப் போயியையும் அவர்கள் வண்டியில் ஏற்றிக்கொள்ள, வண்டி உடனே புறப்பட்டு ரயில் ஸ்டேஷனை நோக்கிச் சென்றது.
இவ்வாறு மாசிலாமணி மகா பயங்கரமான பெருத்த சதி ஆலோசனை செய்து, ரமாமணி இடும்பன் சேர்வைகாரன் முதலியோரை சென்னைக்கு அனுப்பிவிட்டு, தனது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த போலி மனோன்மணியம்மாளிடம் போய், சாந்தி கலியாணம் நிறைவேற்றத் தீர்மானித்தவனாய், இரவின் வருகையை எதிர்பார்த்துப் பார்த்து ஆவலே வடிவாக இருந்து, வாடி வதங்கித் துவண்டு கிடந்தான். அன்றைய தினம் இரவில், அவன், பெண் வேஷந்தரித்து வந்திருந்த கந்தசாமி இருந்த சயன அறைக்குச் சென்ற காலத்தில், அவ்விடத்தில் நடந்த விநோத சம்பவங்களை நாம் விவரிப்பதற்கு முன், அன்றைய தினம் காலையில் மன்னார்குடி வேலாயுதம் பிள்ளையின் வீட்டில்