206
மாயா விநோதப் பரதேசி
நடத்த வேண்டும் என்பதே அன்றி வேறல்ல. ஸ்திரீகளிடம் முன் சொல்லப்பட்ட குணங்கள் இல்லாவிட்டால், புருஷர்களது மனதில் அவ்வளவு அதிகமான மன இளக்கமும் கவர்ச்சியும் ஏற்படுவது சந்தேகம். ஒரு ராஜாங்கத்தில் மகா மேதாவிகளான எத்தனையோ ஜனங்கள் இருந்தாலும், அரசன், அல்லது மந்திரி, அல்லது சேனாதிபதி ஆகிய ஒருவனது அதிகாரத்திற்கும், புத்திப் போக்கிற்கும் அடங்கி எல்லா ஜனங்களும் நடந்து கொண்டால் மாத்திரம் ராஜ்யபாரம் நடைபெறுமே அன்றி, எல்லோரும் ஒருவருக்கொருவர், புத்தியிலும் மற்ற எல்லா அம்சங்களிலும் சமதையென்று சொல்லி, எல்லோரும் தத்தம் மனப்போக்கின்படி நடந்தால், அந்தத் தேசம் கலகத்திற்கு இருப்பிடமாய் வெகு சீக்கிரம் அழிந்து போவது நிச்சயம். அதுபோல ஒவ்வொரு குடும்பத்திலும், தலைவனான புருஷனுக்கு அடங்கியே ஸ்திரீகள் தான் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பள்ளிக்கூடத்திற்குப் போகா விட்டாலும் இயற்கையிலேயே சில பெண்களுக்கு நல்ல பகுத்தறிவும், விவேகமும் இருப்பது சகஜமே. அதைக்கூட அவர்கள் தங்கள் புருஷர்களுக்கு எதிரில் காட்டி பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் மறைத்து, தங்களை அடக்கி, அவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, ஸ்திரீகளை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி, புருஷருக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வியை அவர்களுக்குப் புகட்டி, அவர்களுக்கு ஆண்பிள்ளைகளின் மனப்போக்கை உண்டாக்கிவிட்டால் குடும்ப வாழ்க்கையில், புருஷர்களுக்கும் அவர்களுக்கும் எப்படி ஒற்றுமை உண்டாகும்? குடும்பம் க்ஷேமகரமாகவும், ஒற்றுமையாகவும் நடந்து அபி விருத்தியடைவதே பிரதானமன்றி, எல்லோரும் தான்தான் அதிக புத்திசாலி என்றும், தான் மற்றவரைப் பணிவது கூடாதென்றும், தனக்கும் சரியான மரியாதையும் கண்ணியமும் ஏற்பட வேண்டுமென்றும் எண்ணி அகத்தை கொண்டு குடும்பத்தைச் சீர்குலைப்பது உசிதமன்று என்பதும், கடவுளின் சிருஷ்டி நோக்கம் அப்படி இருக்குமெனத் தோன்றவில்லை என்பதும் என் தகப்பனாருடைய கொள்கையாகையால், அவர் என்னை எந்தப் பள்ளிக்கூடத்திலும் வைக்கவில்லை. வீட்டிலுள்ள தாய்