பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

59


தொழிலாளி வர்க்கம் உலக மக்களது விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு போராடுகிறது. இதனையுணர்ந்த கார்க்கி உலக விடுதலைக்காகப் போராடுகிற கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட தொழிலாளிகளைத் தமது கதாபாத் திரங்களாகப் படைத்தார்.

ஒரு கலைப் படைப்பு என்பது ஒரு வர்க்கச் சித்திரமல்ல. சமுதாயத்தில் செயல்படும் சகல வர்க்கங்களிடையே நடைபெறும் பொருளாதார, அரசியல் சிந்தனைப் போராட்டங்களின் ஒருமையான சித்திரம்தான் அது. சமுதாயம் என்பதே போராடும் வர்க்கங்களின் ஒருமைதானே?

வளர்ச்சியடைந்த சோஷலிச சமுதாயத்தில்தான் குழு நலன்களுக்காகப் போராடும் குழுக்கள் இல்லை. தொழிலாளி, விவசாயி, அறிவுத்துறையினர் என்ற வேறுபாடுகள், அனைத்து வர்க்கங்களின் ஒரு சீரான பொருளாதார, கலாசார வளர்ச்சியினால் அகன்றுவிடுகின்றன. அப்பொழுதுதான் நாட்டு மக்களனைவரின் நலன்களும் ஒன்றாகின்றன. வர்க்க அரசு என்ற தன்மையிலிருந்து மக்கள் அரசு என்ற தன்மை தோன்றுகிறது. சோவியத் மக்கள், தங்கள் 60 ஆண்டுச் சாதனையில் இந்த நிலையை அடைந்துள்ளார்கள்.

மேற்கூறிய கருத்துக்களால் இரண்டு அடிப்படைகள் தெளிவாகின்றன. அவையாவன:

1. ஒரே பொதுவான கருத்தைக் கலைஞனது திறமை, கற்பனை, வரலாற்று நோக்கு, தத்துவ நோக்குகளுக்கேற்பப் பலவிதப் படிமங்களாக்கலாம்.

2. எல்லாக் கலைஞர்களும் வாழ்க்கையின் முரண்பாடுகளில் இருந்துதான் கலைப் படைப்புகளைத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையின் இயக்கப் போக்கை மேலும் மேலும் அறிந்துகொண்டு வரலாற்றுக் கண்ணோட்டமும் தத்துவ நோக்கமும் பெறும்பொழுது, அவர்களுடைய கலைப் படைப்புகள் செழுமையடைகின்றன.