பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

கிளர்ச்சிகளின் தொடர்ச்சி

இராமநாதபுரம் கோட்டையிலிருந்து மதுரையை அடைந்த கர்னல் அக்கினியூவின் உள்ளம் சிவகங்கைச் சீமைக்குள் புகுவதற்கு துடித்துக் கொண்டு இருந்தது. மலபார் பகுதியில் இருந்து பலமான ஆயுதப் படையணிகளின் உதவியை எதிர்பார்த்து காத்து இருந்தான். கோவை, திண்டுக்கல், வழியாகத் திருப்பத்துாருக்கு வரும் வழியில் மலபார் அணிக்கு திண்டுக்கல் சீமையில் பலத்த எதிரிப்பு இருந்தது. பல இடங்களில் கிளர்ச்சிக்காரர்களுடன் மோதி பெருமளவு சேதாரங்களைப் ஏற்படுத்திவிட்டு அந்த அணி நத்தம் அடைந்தது. அங்கு தொண்டமானது துரோகக் கும்பல் கும்பெனியாாது அணிகளுடன் சேர்ந்து கொண்டது. பின்னர், அவர்கள் சிவகங்கைச் சீமை, பிரான்மலைக் கோட்டையைப் பிடித்துவிட்டு திருப்பத்துார் சென்றுவிடலாம் என்ற எளிதான நினைப்பில் பிரான் மலையைத் தாக்கினர்.[1] ஆனால் ஏமாந்து போய் கிளர்ச்சிக்காரர்களிடம் சரியான உதை பெற்று நத்தத்திற்கே திரும்பினர். மற்றொரு முயற்சியை மேற்கொண்டு மணப்பச்சேரி வரை முன்னேறினர். ஆனால் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்காரர்களால் மீண்டும் நத்தத்திற்கு தூரத்தியடிக்கப்பட்டனர். இப்பொழுது கும்பெனி அணிகள் பிரான்மலையைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டு சத்துரு சங்காரக்கோட்டை வழியாகத் திருப்பத்துரை அடைவதற்கு காட்டுப்பாதையொன்றைத் தேர்வு செய்தனர். கிளர்ச்சிக்காரர்களது ஏவுகனை (ராக்கெட்) வெடிகளில் இருந்து கும்பெனிப்படை கர்னல் இன்னிங்ஸ் தப்பித்து திருப்பத்துரை அடைந்தான்.

[2]


  1. 1 Military Consultations 285. (18-6-1801) pp. 4559-61
  2. 2 Military Consultations 286 (4-8-1801) pp. 5348-49.