பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

புயல் ஓய்கிறது

றவர் சீமையின் மகோன்னத வரலாற்றின் இறுதிப்பகுதி. வீரமும் மானமும் உயிரினும் உயர்ந்ததாக மதிக்கப்பட்ட நாட்கள் மறைந்துவிட்டன. சங்ககாலம் தொட்டு மங்கலத் தமிழ் முழக்கிய மறவர், மாற்றானின் சூழ்ச்சியால் சீரழிவை நோக்கிச் சரிந்தனர். ஆர்க்காடு நவாபினால் அடிமையாக்கப்பட்ட சிவகங்கைச் சீமை மக்களை விடுவித்து மீண்டும் மன்னராட்சியை நிலைநிறுத்தப் போராடிய மருது சகோதரர்களின் தன்னேரிலாத் தலைமையை வரலாறு மறக்கவில்லை. மறுக்கவில்லை. ஆனால் அவர்களால் விடுதலைபெற்ற சிவகங்கைச்சீமை மக்கள்தான் மறந்து விட்டனர். மதம், சாதி, இனம் என்ற மயக்கத்தை ஏற்படுத்திய மாற்றாரின் சதியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

பாண்டியப் பேரரசர்கள், சேதுபதி மன்னர்கள் ஆகியோர் வழி நின்று, சிவகங்கைப் பிரதானிகள் பொது மக்களது நிறுவனங்களை சாதி, சமய பாகுபாடு இல்லாமல் போற்றிப் பரந்ததைச் சிந்தித்துப் பார்க்கக்கூட இந்த வாதிகளுக்குப் பொறுமை இல்லை. பொது வாழ்க்கையில் குடிமக்களிடையே கள்ளர், மறவர், அகம் படியர் என்ற வேற்றுமை உணர்வுகளை அவர்கள் ஆட்சி ஊக்குவிக்கவில்லை. அதற்குமாறாக, மறத்தமிழினமான இந்த மூன்று கொடிவழிகளையும்,உணர்வுப்பூர்வமாக ஒற்றுமைப்படுத்தும் உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வரலாறு காணாத வகையில் மருதுசகோதரர்களும் அவர்கள் வழியினரும் சிவகங்கைச் சீமையின் பல ஊர்களில் உள்ள ஏனைய இரு பிரிவினருடன் மணஉறவுகளைக் கொண்டு இணைந்து மகிழ்ந்தனர். காரனம் சமுதாயமும் நாடும் முன்னேற வேண்டுமானால் வாழ்க்கையின் நேரடியான உண்மைகளை உணர்தல் வேண்டும். அத்துடன் அவை உண்மையாக மட்டும் இல்லாமல் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். அப்பொழுது தான் அந்தவழியில் வளர முடியும் என்ற நியதிகளை அவர்கள் நம்பினர்.