47
மரணதண்டனை வழங்கப்படும் எனவும் கலெக்டரது பயமுறுத்தல் விளம்பரம் வெளியிடப்பட்டது.[1]
அடுத்து கிளர்ச்சிக்காரர்கள் கூட்டம் கமுதி நோக்கிப் புறப்பட்டது. கமுதி கோட்டையை துப்பாக்கி, ஈட்டி வீரர்கள் தாக்கினர். அவைகளினால் பலன் இல்லை என்று புரிந்து கொண்டபின் அபிராமத்திற்குப் புறப்பட்டனர். ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் ஊரைத் தாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் நாகலாபுரம் பள்ளிமடம் குடிகள் தங்களிடம் இருந்த நகை நட்டுக்களை திருச்சுழி கோயிலில் ஒப்படைத்துவிட்டு பக்கத்து கிராமங்களுக்கு பயந்து ஓடினர் என்ற விபரம் பள்ளிமடம் அமில்தாரது அறிக்கையில் இருந்து தெரிகிறது.[2] இதற்கிடையில் நிலைமையை அறிந்த திருநெல்வேலி கேப்டன் சாகிபர் லெப்டினண்ட் மில்லரை 16வது பட்டாளத்தின் முதல் அணியுடன் கமுதிக்குச் செல்ல உத்திரவிட்டான். மில்லரும் 12-3-1801 கமுதி கோட்டைவந்து சேர்ந்தான்.[3] இதற்கிடையில் பாஞ்சாலங்குறிச்சி போராளிகளுக்கும் சிவகங்கை சேர்வைக்காரர்களுக்கும் உள்ள கடிதப் போக்குவரத்தைத் தடை செய்தனர். மண்டல மாணிக்கத்தில் தங்கி இருந்து இந்தப் பணிகளைக் கவனித்து வந்த சுப்பையர் என்பவரையும் அவரது ஆறு பணியாட்களையும் பரங்கிகள் கைது செய்து இராமநாதபுரம் கோட்டையில் அடைத்து விலங்கிட்டனர்.[4]
சுப்பையரிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தில் இருந்து, சிவகங்கை சேர்வைக்காரர்களைப் பற்றிய சந்தேகத்தை கும்பெனி யார், உறுதிப்படுத்திக்கொண்டதுடன் சிவகங்கைக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்கும் இடைப்பட்ட இரகசிய இராணுவத் தொடர்பு விவரங்களையும், மீண்டும் இராமநாதபுரம் சீமையில் நடக்கவிருக்கும் கிளர்ச்சிகளின் சூத்திரதாரியாக மயிலப்பன் சேர்வைக்காரர் பங்கு வகிக்க இருப்பதையும் கும்பெனியார் புரிந்து கொண்டனர். இத்துடன் இந்த இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிவகங்கை சேர்வைக்காரர்களது ஆதரவாளர்களான பெரும்புள்ளிகள் யாவர்