பட்டணங்களிலே தான் வாழ்க்கை அவசரம் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறது; நாட்டுப் புறத்திலே இத்தனை அவசரம் இல்லை.
பட்டணத்துக் கொதிப்பு வாழ்க்கை உகந்ததல்ல, கவிஞர் டேவீஸ் கூறியதுபோல கற்றுப் பார்க்க நேரமில்லாத வாழ்க்கை வறியது தான், கவிதையைப் படிக்கும்போதாவது இந்தப் பரபரப்பைத் துறந்து அமைதியாக இருக்கவேண்டும். அதனால் நல்ல பலன் கிடைக்கும்.
கவிதையிலே நாட்டம் உடையவர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். கவிதையின் மேல் காதல் கொண்டவர்கள் ஒருவகை. அவர்களுடைய கவிதைக் காதல் அடங்குவதே இல்லை, இளமையின் துடிப்பு அவர்கள் உள்ளத்திலே சதா மோதிக்கொண்டிருக்கிறது. நாகரிகமான பொழுது போக்காகக் கவிதையைப் படிப்பவர் ஒருவகை. கவிதையிடத்திலே தஞ்சமடைகின்ற மற்றொரு வகையாரும் உண்டு. வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு இவர்களுக்குக் கவிதை உறுதுணையாக இருக்கின்றது. கவிதையின் மாணவர்களாக அமர்ந்து அதன் பெருமையை அனுபவிக்கின்றவர்கள் நான்காம் வகையினர். ஆங்கிலக் கவிஞர் வர்ட்ஸ்வர்த் இவ்வாறு வகைப்படுத்தியிருக்கிறார்.
டேவீஸ் எழுதிய பாடலை மனதில் வைத்துக்கொள்ளும்படி இந்த நான்கு வகுப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன்.
8