பக்கம்:மின்னல் பூ.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காதல்

திருவிழிகள் திறந்திடவே
செய்திடுவேன் இக்கணமே,
பரிவுடன் நீ எழுந்திடுவாய்
பாவி யென்றன் உளம் மகிழ’,

‘கண்மணியே, என்றனுளம்
கத்தியினால் ஊடுருவி
மண்ணிதனில் உயிர் கொட்டி
மாண்டு விட்டேன்’ என்றேனே.

‘அன்பெல்லாம் வாழ்விடமே,
அணிமார்பால் உன்னுள்ளம்
சென்றதொரு புண்ணதுவும்
தெரியாதணைப்பன்’ என்றாள்.

பொங்கு முளம் குளிர்ந்திடவே
பொன்பொழிகள் பேசிவிட்டாள்;
மங்கைதனைத் தான் மறுக்க
வாய்வருமோ இனிமேலே?-

சுடுகாட்டில் என்னுடலைச்
சுட்டெரிக்க சுற்றத்தார்
அடைவாக நெஞ்சிதன்மேல்
அழுதுவைத்த கட்டைதனைத்
தள்ளிமிகக் கைவீசிச்
சதுராய் எழுந்தமர்ந்தேன்;
நள்ளிரவில் கனவெனவே
நானறிந்து நெட்டுயிர்த்தேன்.


ஜெர்மன் கவிதையொன்றைத் தழுவி எழுதியது.

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/57&oldid=1117608" இலிருந்து மீள்விக்கப்பட்டது