பக்கம்:மின்னல் பூ.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விலங்கு நெறி


நாளின் பெருவிளக்காம் நற்கதிரோன் மேல்வானில்
காளைச் சினம் உகுத்துக் கனித்தநகை தான்பூத்து
நின்றேயவ் வான் திரையில் நீள் கதிர்ப்பொன் தூரிகையால்
ஒன்றோ ஒருகோடி ஓவியம் தீட்டியவை
மாற்றி யழித்தாடி மகிழ்ந்திருக்கும் வேளையிலே
காற்றின் இளத்தழுவல் கன்னற் சுவைநாடி
செவ்வரளிப் பூக்குலுங்கும் சிற்றோடை யருகணைந்தேன்
கொவ்வைக் கொடிபடர்ந்து குறுநொச்சிக் கிளையெல்லாம்
கனிப்பவழத் தணி செய்த கரும்பச்சைப் பின்னலின்கீழ்
தனித் திருந்து சாய் பொழுதின் ஜாலமெல்லாம் கண்டிருந்தேன் -
மினுமினுத்துச் சிலுசிலுக்கும் மெல்லோடை மருங்குவளர்
மணிமணிப்பூக் கன்னியர்கள் மனங்களிக்க நடமாடி
ஒயிலாய் உடல்வளைத்து ஓடை நீர் முத்தமிடக்
குயிலொன்று தூரத்தே கூவித் துணைதேட
எங்கும் ஒரு மோன ஏகாந்தம் ஆட்சிசெயும்
பொங்கும் அழகதனிற் புகுந்ததொரு மீன்கொத்தி;

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/77&oldid=1121398" இலிருந்து மீள்விக்கப்பட்டது