பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

விந்தன்



அன்றிரவு வீட்டில் படுத்துத் துங்கிக்கொண்டிருந்த போது, எங்கிருந்தோ சுண்டெலி ஒன்று வந்து என்மேல் விழுந்தது. 'எலி, எலி!' என்று நான் கத்தினேன். எனக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த என் கணவர், 'எங்கே தடி, தடி?’ என்று என்னைத் தொடர்ந்து கத்திக்கொண்டே எழுந்தார். ‘எலியை அடிப்பதற்கா தடி!’ என்றேன் நான். 'மூடு, வாயை!' சின்ன பாம்பாயிருந்தாலும் பெரிய கொம்பால் அடி!’ என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!' என்று சொல்லிக்கொண்டே இறக்கி வைத்திருந்த விளக்கின் திரியை ஏற்றி எடுத்துக்கொண்டு அவர் தடியைத் தேடினார். ‘பாம்புக்குத்தானே அப்படிச் சொன்னார்கள்? எலிக்குச் சொல்லவில்லையே!' என்றேன் நான். ‘உனக்குத் தெரியாது; பேசாமல் இரு!’ என்று அவர் என்னை அடக்கி விட்டுத் தடியைத் 'தேடு, தேடு' என்று தேடினார். ஒரு வழியாகத் தடியும் கிடைத்தது.

அந்தத் தடியுடன் அவர் எலியை 'விரட்டு, விரட்டு’ என்று விரட்டினார். அது பழங்கலம் அடுக்கி வைத்திருந்த மூலைக்கு ஓடிற்று. அதைத் தொடர்ந்து ஓடிய அவர், அதன்மேல் போட்டார் ஒரு போடு! உடைந்தது எலியின் மண்டையல்ல; பழங்கலங்கள்! அடுத்தாற்போல் அந்த எலி உறிக்குத் தாவிற்று; விடுவாரா? தடியால் ஓங்கி அடித்தார் இன்னும் ஓர் அடி! காலியானது எலி அல்ல; உறி! கயிறு மட்டுமே எஞ்சி நின்ற அந்த உறியிலிருந்து எண்ணெயும் நெய்யும் வழிந்து இரண்டறக் கலந்து எங்கள் 'எட்டடிக் குச்சு'க்குள்ளே ஒரே எண்ணெய் ஆறாக ஓடிற்று. என்ன இருந்தாலும் என் கணவர் ஆண் பிள்ளையல்லவா? மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே 'என்ன ஆனாலும் சரி, இன்று உன்னை நான் விடுவதில்லை!' என்று அந்த எலியை விரட்டிக் கொண்டே வீதிக்கு ஓடினார். நான் ‘விதியே!' என்று பழங்கலத்திலிருந்தும், உறியிலிருந்தும் விழுந்து உடைந்த மண்பாண்டங்களின் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பதில் முனைந்தேன்.