பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

நிற்க, 'அந்த ரசிகனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லிப் போலீசாரை அனுப்பிவிட்டு, அவனுக்கு என் போட்டோ ஒன்றைக் கொடுத்தனுப்பு!’ என்று அவள் உத்தரவிட, அங்ஙனமே அந்தக் காரியதரிசியாகப்பட்டவர் போலீசாரை வெளியே அனுப்பிவிட்டு ரசிக சிகாமணியாகப் பட்டவனிடம் பிரேமகுமாரியின் போட்டோ ஒன்றை எடுத்துக் கொடுக்க, ‘கண்டேன் கண்டேன், என் கனவுக் கன்னியைக் கண்டேன்!' என்று அவன் ஆனந்தக் கூத்தாட, ‘உம்மைப் போன்ற சோணகிரிகளுக்கெல்லாம் இந்தப் போட்டோவை அனுப்பி வைக்கத்தான் இங்கே ஒரு தனி இலாகாவே வேலை செய்து கொண்டிருக்கிறதே? இந்த எழவை நீர் கடிதம் எழுதிப் பெற்றுக் கொண்டால் என்ன? அதை விட்டு இதற்காக அர்த்த ராத்திரியில் இங்கே வந்து ஏன் கழுத்தை அறுக்கிறீர்? போம் ஐயா, போம்!' என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவனை விரட்டி, 'கடிதம் எழுதினால் நட்சத்திரத்தை நினைத்துக் கொண்டு இந்த வீட்டு நீச்சல் குளத்தில் இறங்கி மூன்று வாய் தண்ணீரை அள்ளி 'மொடக், மொடக்'கென்று குடிக்க முடியுமா? நட்சத்திரத்தை நினைத்துக்கொண்டு இந்த வீட்டு சோபாவில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியுமா? நட்சத்திரத்தை நினைத்துக்கொண்டு இந்த வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட முடியுமா? நட்சத்திரத்தை நினைத்துக்கொண்டு இந்த வீட்டுக் கண்ணாடியில் அழகு பார்க்க முடியுமா?’ என்று அவன் ஒரே நட்சத்திரமாக அடுக்க, 'நல்ல நட்சத்திர ரசிகர் ஐயா, நீர்? போய்த் தொலையும்!' என்று காரியதரிசி தன் தலையில் தானே அடித்துக்கொண்டு, அவனை வாசல் வரை கொண்டு போய் விட்டுவிட்டு வருவாராயினர்.

மறுநாள் காலை ‘ஏழு மணி கால்ஷீட்'டுக்கு எட்டு மணிக்குப் போவதுகூட நட்சத்திரத்துக்கு அழகல்ல என்று எண்ணியோ என்னவோ ஒன்பது மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்து, ஒரு மணி நேரம் நீச்சல் குளத்தில் நீந்தி