பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

227

குதியும் போட்டபடி, 'அகப்பட்டுக்கொண்டீரா, நீர்தான் மிஸ்டர் விக்கிரமாதித்தர்!’ என்று 'விலையுயர்ந்த புன்னகை’ ஒன்றைச் சிந்த, 'ஆம், நானேதான்!' என்று அவர் சொல்லி விட்டு, 'அதைத் தெரிந்து கொள்ளவா இதுவரை நீங்கள் உங்களுடைய பெயரைச் சொல்லாமல் அடம் பிடித்தீர்கள்?' என்று சிரித்துக்கொண்டே கேட்க, 'ஆம், இங்கே நீங்கள் வந்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன். உங்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால் என்னை எப்படி உங்களுக்குத் தெரியாதோ, அதே மாதிரி உங்களையும் எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதற்கு என்னடா வழி என்று யோசித்தேன். இப்படி ஒரு வழி தோன்றிற்று. அதைக் கையாண்டேன்; எதிர்பார்த்த வெற்றியையும் பெற்றேன்!' என்று அவள் சொல்ல, அதுதான் சமயமென்று தம் மடியிலிருந்த நவரத்திர மாலையை எடுத்துச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே அவள் கையில் ‘திணி, திணி' என்று திணித்து, 'ரகசியம்; பரம ரகசியம். தர்மகர்த்தா கொடுக்கச் சொன்னார் இதை!' என்று அர்ச்சகர் அவள் காதோடு காதாகச் சொல்ல, 'இதற்கா நீங்கள் அத்தனை பாடு பட்டீர்கள்? அவருக்கு இது ரகசியமாயிருந்தாலும் ஊருக்கு இது ஒன்றும் ரகசியமில்லையே!' என்று சொல்லிக்கொண்டே அவள் அந்த நவரத்தின மாலையை எடுத்து அங்கேயே அணிந்து கொள்வாளாயினள்."

தினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான வித்தியா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.....