பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

259


இதனால் பல நண்பர்கள் அவரைக் கண்டதும் பயந்து ஓடி ஒளிய ஆரம்பிக்க, தப்பித்தவறி அகப்பட்டுக் கொண்ட சிலரும், அவர் தாம் எழுதியதைப் படித்துக் காட்டும் முன்னரே, 'பேஷ், பேஷ்! சபாஷ், சபாஷ்!' என்று சொல்லி விட்டு மெல்ல நழுவப் பார்க்க, அந்த பேஷும் சபாஷும் கூடத் தாம் எழுதிய கதைக்கா, கொடுத்த ‘டிப'னுக்கா என்று தெரியாமல் அவர் தவிக்க, அவர்களால் 'பேஷ்' போடப்பட்ட கதைகளும், 'சபாஷ்' போடப்பட்ட கட்டுரைகளும் கூடச் சீக்கிரமே திரும்பி வந்து, 'சந்தேகம் வேண்டாம்; எல்லாம் ‘டிப'னுக்கே!' என்பதை ஐயமற நிரூபித்து, அவருடைய தவிப்பைத் தீர்த்து வைத்தன.

ஆனாலும் அவர் தாம் மேற்கொண்ட முயற்சியைக் கைவிடவில்லை; 'தமிழ்நாடு’ என்ற பெயரைச் சம்பந்தப்பட்டவர்கள் வைக்கத் தயங்கியபோது, 'அவர்கள் என்ன வைப்பது, நாங்களே வைத்துக் கொள்கிறோம்' என்று தங்கள் முகவரியோடு 'தமிழ்நாடு’ என்ற பெயரையும் சிலர் சேர்த்து எழுதிக்கொண்டு வரவில்லையா? அதேமாதிரி 'என்னை இந்தப் பத்திரிகையாளர்கள் எழுத்தாளராக்கா விட்டால் என்ன, என்னை நானே எழுத்தாளராக்கிக் கொள்கிறேன்!' என்று அவரும் தம் பெயருக்குப் பின்னால் 'அழகப்பன், எழுத்தாளர்' என்று சேர்த்து எழுதினார். அத்துடன் அவர் நிற்கவில்லை; அதே முறையில் ‘பிளாஸ்டிக் போர்டு' ஒன்றையும் தயார் செய்து, தம் வீட்டின் முகப்பில் மாட்டினார். அதற்குப் பின் அவர் எழுதும் கடிதங்கள், கொடுக்கும் ‘விசிட்டிங் கார்டு'கள் ஆகியவற்றிலெல்லாம்கூட அந்த முகவரி பார்ப்பவர்களின் கன்னத்தில் அறைவதுபோல் கொட்டை கொட்டையான எழுத்துக்களில் ‘பளீர், பளீர்' எனத் தெறிக்கலாயிற்று.

இங்ஙனம் பிறரைப் பொருட்படுத்தாமல் அவர் தம்மைத்தாமே எழுத்தாளராக்கிக் கொண்டு வந்தகாலை, அவருடைய அத்தியந்த நண்பர்களில் ஒருவர், 'இந்தக் காலத்தில் எதற்கும்