பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

261

அது. ‘எழுத்தாளர் சங்கத்தில் அங்கத்தினராக வருபவர் உண்மையிலேயே எழுத்தாளரா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க இப்படி ஒரு சோதனையை இவர்கள் வைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது! இதைவிட, இதுவரை நீர் எத்தனை கதைகள் எழுதியிருக்கிறீர் என்று கேட்டிருக்கக் கூடாதா? அப்படிக் கேட்டிருந்தால் வகைக்கு நூற்று ஒன்று என்று எழுதி, இவர்களை நான் மூர்ச்சை போட்டுக் கீழே விழ வைத்திருப்பேனே! இப்போது நான் இதற்கு என்னத்தைச் சொல்ல? என்னத்தை எழுத? பத்திரிகைகளில் வெளி வந்தால்தான் எழுத்தாளரா, இல்லாவிட்டால் எழுத்தாளர் இல்லையா? இது என்ன அநியாயம், இது என்ன அக்கிரமம்!' என்று அவர் குமைய, செயலர் 'என்ன விஷயம்?’ என்று குடைய, அழகப்பர் விண்ணப்பத் தாளில் தாம் கண்ட வேண்டாத கேள்வியைப் பற்றி அவரிடம் விவரிக்க, 'பூ, இவ்வளவுதானே? அதற்குப் பயந்து இங்கே கட்ட வந்த சந்தாத் தொகையை நீங்கள் மீண்டும் உங்களுடைய சட்டைப் பைக்குள்ளே போட்டுக்கொண்டு போய் விடாதீர்கள்! ஆண்டுக்கொரு முறை விழா நடத்தி, அங்கத்தினர் அனைவருக்கும் ஒரு வேளை சாப்பாடாவது போட்டு அனுப்ப இந்தச் சங்கம் எப்படியாவது உயிர் வாழ வேண்டியிருக்கிறது. அதற்காகவாவது நீங்கள் செலுத்த வேண்டிய சந்தாத் தொகையைச் செலுத்தி, உடனே அங்கத்தினராகிவிட்டுப் போங்கள்!' என்று செயலர் அபயம் அளிக்க, ‘அப்படியானால் என்னுடைய கதைகள் வெளியான பத்திரிகைகளில் இரண்டின் பெயர்கள்ளை இந்த விண்ணப்பத்தாளில் குறிப்பிடச் சொல்கிறீர்களே, அதற்கு நான் என்ன் செய்வது?’ என்று அழகப்பர் கடாவ, 'கவலை வேண்டாம்; செத்துப் போன பத்திரிகைகள் எத்தனையோ இல்லையா? அவற்றில் இரண்டின் பெயர்களை எழுதிவிட்டுப் போங்கள்!' என்று செயலர் அதற்கும் சட்டென ஒரு வழி காட்ட, 'நன்றி!’ என்று அழகப்பர் அப்படியே எழுதி, கொடுக்க வேண்டியதையும் கொடுத்து, ‘என்னுடைய