பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

வளர்ச்சிக்கு இந்தச் சங்கம் ஏதாவது வழி காட்டுமா?’ என்று மெல்ல உசாவ, 'சங்கம் இப்போது தன்னுடைய வளர்ச்சிக்கு வழிதேடிக் கொண்டிருக்கிறது. அந்த வழியைக் கண்ட பிறகுதான் அது எழுத்தாளர் வளர்ச்சிக்கு வழி காணும்!' என்று செயலர் செப்ப, 'அதுவரை என்னால் எழுதப்பட்டவை யெல்லாம் என்னிடமே இருக்க வேண்டியதுதானா?' என்று அழகப்பர் பின்னும் கேட்க, 'வேண்டாமே! அதிசய மோதிரம், அபூர்வ மூலிகை, ஆச்சரிய குண சிந்தாமணி என்பது போன்ற சரக்குகளின் விளம்பரத்துக்கும், வி.பி.பி. ஆர்டருக்கும் என்றே சில பத்திரிகைகள் இங்கே நடப்பது உண்டு. அவற்றுக்கு யார் என்ன எழுதி அனுப்பினாலும் அதை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் அப்படியே அச்சுக்கு அனுப்பிவிடுவது உண்டு, உண்டு. அதனால் அவற்றில் உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் தப்பாமல், தவறாமல் வருவதும் உண்டு, உண்டு, உண்டு. வாசகர்களைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்படாமல், அவர்களுக்காகக் கொஞ்சங்கூட இரங்காமல் உங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கென்றே நடந்து வரும் அந்தப் பத்திரிகைகளுக்கு உங்களுடைய விஷய தானத்தை உண்மையிலேயே தானமாக எண்ணி அனுப்பி வையுங்கள்; தப்பாமல், தவறாமல் பிரசுரமாகும்!' என்று செயலர் பின்னும் சொல்ல, 'நன்றி, நன்றி!' என்று ஒரு முறைக்கு இரு முறையாக நன்றி தெரிவித்துவிட்டு, 'கண்டேன் கண்டேன், என்னுடைய லட்சியத்தை எட்டிப் பிடிக்க வழி கண்டேன்!' என்று அழகப்பர் ஏறுபோல் அங்கிருந்து 'ஏறு நடை' நடந்து வருவாராயினர்.

செயலர் சொன்னது சொன்னபடி, விஷயத்தைத் தானமாகப் பெறுவதற்கென்றே நடந்துகொண்டிருந்த சில வி.பி.பி. பத்திரிகையாளர்களை அணுகி, அழகப்பர் தம்முடைய ‘விஷய தான'த்தைச் செய்ய, அவர்களும் 'தானம் வாங்கக் கூசிடுவான், தருவது மேலெனப் பேசிடுவான்!’ என்னும் 'தமிழன் தரும'த்தைச் சற்றே மறந்து அவற்றை